டில்லி:

சிதம்பரத்தை 26ந்தேதி வரை கைது செய்யக்கூடாது என்று அமலாக்கத்துறை தொடர்புடைய வழக்கில் உச்சநீதி மன்றம் முன் ஜாமீன் வழங்கி உள்ளது.

என்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்துள்ள நிலையில், அமலாக்ககத்துறையும் கைது செய்ய முயற்சி மேற்கொண்டது. இந்த நிலையில், உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்த ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீது, சிதம்பரத்தை வரும்  திங்கட்கிழமை வரை கைது செய்யக்கூடாது என அறிவித்து வழக்கை உச்சநீதி மன்றம் ஒத்தி வைத்து உள்ளது. மேலும், சிதம்பரத்துக்கு சிபிஐ நீதிமன்றம் வழங்கியுள்ள 5 நாள் சிபிஐ காவல் உத்தரவில்  தலையிட மறுத்து விட்டது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம், 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில், அமலாக்கத்துறை சார்பிலும் சிதம்பரத்தை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சிதம்பரம் கைது நடவடிக்கைக்கு முன்னர், முன்ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, அன்றைய தினம் அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுத்துவிட்ட நிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதற்கிடையில், கடந்த புதன்கிழமை இரவு சிதம்பரம் கைது செய்யப்பட்டு விட்டதால் முன்ஜாமீன் மனு காலாவதியாகி விட்டது. அதனால், கைது நடவடிக்கையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையை, நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது,  அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா மற்றும் சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி இடையே காரசாரமான வாதங்கள் நடைபெற்றது.

சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கக் கூடாது என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

சிதம்பரம் கைது செய்யப்பட்டதால் முன் ஜாமீன் மனு செல்லாது என சிபிஐ தரப்பில் துஷார் மேத்தா வாதாடினார். மேலும், “சிதம்பரம் சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமானது. கைது செய்தால் தான் உண்மை வெளிவரும். முன் ஜாமீன் எனும் பாதுகாப்பு இருந்தால் ப.சிதம்பரத்தை விசாரிக்க இயலாது. வழக்கின் விசாரணை எவ்வளவுதான் நடந்தாலும் உண்மைகள் அவரிடம் இருந்து வெளிவராது. இதற்கு காரணம் அவரின் அந்தஸ்து. இன்னொன்று அவருக்கு சட்ட நுணுக்கங்கள் தெரியும்.

சிதம்பரத்திற்கு சொந்தமாக வெளிநாட்டில் 17 வங்கிக்கணக்குகள் 10 அசையா சொத்துக்களின் விவரங்கள் கிடைத்துள்ளன. அரசியல் காழ்ப்புணர்ச்சி என சிதம்பரம் கூறினாலும் வலுவான ஆதாரங்கள் இருப்பதால் தான் கைது செய்தோம்.” எனத் தெரிவித்தா

இருப்பினும், சிபிஐ வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள பணமோசடி வழக்கில், ப.சிதம்பரத்தை கைது செய்ய நீதிபதிகள் திங்கட்கிழமை வரை தடை விதித்துள்ளனர்.