பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்திட காவிரி டெல்டா விவசாயிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேளான் பெருமக்கள் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் சுமார் 43.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதில், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரினை ஆதாரமாகக் கொண்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் நடப்பு பருவத்தில் 13 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

மேட்டூர் அணையிலிருந்து 13.8.2019 ன்றும், கல்லணையில் இருந்து 17.8.2019 அன்றும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நேரடி நெல் விதைப்பு செய்து சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேரடி நெல் விதைப்பு முறை மீலம் சாகுபடி மேற்கொள்ளும்போது சுமார் 40 முதல் 45 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுவதோடு, நெற்பயிரும் 10 முதல் 15 நாட்கள் முன்னதாகவே அறுவடைக்கு தயாராகிவிடும். இதனை முன்னெடுத்து செல்வதற்காக சி.ஆர் 1009, சி.ஆர் 1009 சப் 1, கோ 50, ஏடிடி 50, டிகேஎம் 13 போன்ற நெல் ரகங்களின் விதைகள் போதுமான அளவில் இருப்பில் வைக்க நான் வேளாண்மை துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

நடப்பு பருவத்தில் நேரடி நெல் விதைப்பு சாகுபடியினை ஊக்குவிக்க, ஏக்கருக்கு 600 ரூபாய் வீதம் உழவு மாணியம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். அதன்படி, 5 லட்சம் ஏக்கர் பரப்பில் நேரடி நெல் விதைப்பு சாகுபடி மேற்கொள்ளும் வேளாண் பெருமக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், மானியம் வழங்குவதற்காக அரசு 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள்ளூர் பாசன வசதி துணையோடு நேரடி நெல் விதைப்பு முறை மூலம் சாகுபடி செய்யும் இதர மாவட்ட வேளாண் பெருமக்களும், மேற்கண்ட உழவு மானியத்தை பெற்று, நீரை சேமித்து, அதிக விளைச்சல் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.