நீலகிரி

முன்னாள் காவல்துறை அதிகாரி மகனுக்கு கொடநாடு வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான பங்களா நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் உள்ளது. இங்குக் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் இவற்றை நடத்தியது. இவர்களில் கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விட்டார்.

காவல்துறையினர் இதில் தொடர்புடையதாக சயான், வாளையார் மனோஜ் உள்படக் கேரளாவைச் சேர்ந்த 10 பேரைக் கைது செய்தனர்.  வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட பின், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 49 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது. சிபிசிஐடி கடந்த அக.டோபர்  8ஆம் தேதி இந்த வழக்கு விசாரணையின்போது இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்தது

கடந்த அக்டோபர் 13ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கனகராஜின் செல்போன் இருப்பிடம், அவர் எந்தெந்த எண்களுக்குப் பேசியிருந்தார் என்பது குறித்த தகவல்களைச் சேகரித்து வருவதாக சிபிசிஐடி காவலர் தெரிவித்தனர். நீதிபதி, அந்த எண்கள் யாருடையது, ஆய்வுக்கு எங்கே அனுப்பப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பினார்.

சிபி சிஐடி குஜராத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்து நீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கோரியது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை ஒத்தி வைத்திருந்தார். அந்த வழக்கு இன்று மீண்டும் நீலகிரி செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 159 பேரிடம் வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார். குஜராத் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட அலைப்பேசி தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் அந்தத் தகவல்கள் கிடைத்தால் விசாரணையில் பெரியளவில் உதவியாக இருக்கும் என்றும் சிபிசிஐடி தரப்பில் கூறப்பட்டது

கனகராஜ் விபத்தில் சிக்கியபோது அவசர உதவி மையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளார். எனவே இதன் அடிப்படையில் , அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜரா குமாறு சிவ குமாருக்கு சிபிசிஐடி காவலர்கள் சம்மன் அனுப்பியுள்ளனர்.