அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் துவங்கிய நிலையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் மூலம் 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

தமிழகத்தின் முதல் பெண் ஓதுவாராக சென்னையைச் சேர்ந்த சுஹாஞ்சனா நியமிக்கப்பட்டுள்ளார். கரூரில் பிறந்து வளர்ந்த சுஹாஞ்சனா தேவாரம், திருவாசகம் இரண்டையும் கற்றுத் தேர்ந்தவர்.

27 வயதாகும் இவர், திருமணத்திற்குப் பின் சென்னை சேலையூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சேலையூரை அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் ஓதுவாராக நியமிக்கப்பட்டுள்ள இவர் இன்று அக்கோயிலில் தனது பணியைத் துவங்கினார்.

பெரியாரின் கனவையும், கலைஞரின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தையும் 51 ஆண்டுகள் கழித்து தனது ஆட்சியின் 100 வது நாளில் நிறைவேற்றியிருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள், முதன் முதலாக பெண் ஒருவர் கருவறைக்குள் நுழைவதற்கான முயற்சியை எடுத்திருப்பது அனைத்து தரப்பினரையும், குறிப்பாக மகளிரிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் ஓதுவார் சுஹாஞ்சனா அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் காட்சி ….