சென்னை: தமிழகத்தில் இந்த நிமிடம் வரை நீட் தேர்வு நடைமுறையில் உள்ளதால் மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டிய சூழல் உள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  இந்த நிமிடம் வரை தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறையில் உள்ளதால் மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டிய சூழல் உள்ளது. தனியார் நீட் பயிற்சி மையங்களின் கட்டண குறைப்பு தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்.

நீட் தேர்விலிருந்து விலக்கு பெற திமுக அரசு பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சி வந்தவுடன் நீட் தேர்வு விலக்குக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு இன்னும் பதில் வரவில்லை. கடந்த திமுக ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வு அறிவிக்கையை ஏற்கவில்லை. நீட் விலக்கு கோரும் அமைச்சரவை தீர்மானங்களுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. அந்தத் தீர்மானங்களுக்கு அதிமுக அரசு போதிய அழுத்தம் தரவில்லை.

கடந்த அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு தமிழ்நாட்டில் நுழைந்தது. நீட் தேர்வு விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் பேசிவருகிறார். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குப் பெற அதிமுக அரசு போராடவில்லை. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.

தப்போது நீட் நுழைவுத் தேர்வு தாக்கம் தொடர்பாக திமுக அரசு குழு அமைத்து ஆய்வு செய்துவருகிறது. குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து, நீட் தேர்வு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு நிச்சயம் விலக்கு கிடைக்கும் என்பது உறுதி.

தென் சென்னையில் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைக்காக இடம் தேர்வு செய்யப்பட்டு, திட்டமதிப்பீடு மற்றும் வரைபடம் தயாரிக்க பொதுப்பணித்துறையிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்

இவ்வாறு அவர் கூறினார்.

நீட் தேர்வு பயிற்சி குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் கூறியதாவது, , இந்தாண்டு நீட் தேர்விற்கு பயிற்சி வகுப்புகள் நடத்துவது குறித்து முதலமைச்சர் டெல்லியில் இருந்து திரும்பிய பின்னர் பேசி முடிவெடுக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து இன்னும் ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்படவில்லை. அது வந்த பின்னர் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.