சென்னை: தமிழகத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 1ந்தேதி  முதல் பிப்ரவரி 20ந்தேதி  வரை ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே ஆன்லைன் தேர்வை வலியுறுத்தி மாணாக்கர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அதை ஏற்க மறுத்து, நேரடி தேர்வுதான் நடைபெறும் என தமிழகஅரசு பிடிவாதமாக கூறி வந்தது. இந்த நிலையில், தற்போது மாணாக்கர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் கல்வி நிறுவனங்கள்  ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், கல்லூரி மாணாக்கர்களுக்கு ஜனவரி 18ந்தேதிக்கு மேல் தொடங்கவிருந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

பொங்கலுக்கு பிறகுதான் நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்! அமைச்சர் பொன்முடி

இந்த நிலையில், கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக மாணவர் பிரதிநிதிகளுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு வருகின்ற பிப்.1 முதல் பிப்.20 வரை ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.
ஆன்லைன் தேர்வுதான் வேண்டும் என அடம்பிடித்து போராடும் மாணவர்கள் 150 பேர் கைது… மதுரையில் பரபரப்பு
அரசு, தனியார் கலை அறிவியல், பொறியியல்,தொழில்நுட்பக் கல்லூரிகளின் தேர்வுகளை  ஆன்லைனில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், ஆன்லைன் தேர்வு முறையில் தவறுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு பல்கலைக்கழகத்தில் நடத்திய பாடங்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும் எனவும், கிராமப்புற மாணவர்கள் அப்லோட் செய்த விடைத் தாள்கள் வந்து சேர்வது தாமதமானாலும் பெற்றுக்கொள்ளப்படும். பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படும். அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே மாதிரியான முறையிலேயே ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும். ஒரு செமஸ்டர் தேர்வில் 4 தாள்கள் எழுத வேண்டி இருந்தால் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அனுப்பலாம்.

மேலும், ஜூன் அல்லது ஜூலையில் அப்போதைய சூழலை கருத்தில் கொண்டு  கல்லூரி இறுதியாண்டு தேர்வு கண்டிப்பாக நேரடியாக சுழற்சி முறையில் நடத்தப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கு பின்னர் கொரோனா சூழலை பொறுத்து நேரடி வகுப்பு பற்றி முடிவெடுக்கப்படும். பிப்ரவரி 20ஆம் தேதிக்கு பின்னர் கொரோனா சூழலை பொறுத்து நேரடி வகுப்பு பற்றி முடிவெடுக்கப்படும்.

சென்னை பல்கலைக்கழகத்தின் தரம் குறித்து 29ம் தேதி கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசிக்கப்படும். கல்லூரி முதல்வர், கல்வியாளர்களுடன் ஆலோசித்து பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்லூரி மாணவர்களுக்கு இனிமேல் ஆன்லைன் தேர்வுகள் கிடையாது! உயர்கல்வித்துறை அதிரடி