சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற வருகிறது. மார்ச் 20ந்தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில்,  2023-24-ம் நிதி ஆண்டுக் கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  தாக்கல் செய்கிறார். அதைத்தொடர்ந்து 21ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, பட்ஜெட்மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

பேரவையின் இன்றைய கேள்வி நேரத்தின்போது, அந்தியூரில் பலவகை தொழில்நுட்ப கல்லூரி துவக்க அரசு முன்வருமா என அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி; அந்தியூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரி இரண்டும் உள்ளது. இதில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 1150. ஆனால் இந்த ஆண்டு சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை 438. இவ்வளவு காலியிடங்கள் உள்ளது காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கட்டும். அதன்பின்னர் எதிர்கால தேவைக்கு ஏற்ப அப்போது முடிவு எடுப்போம் என்றார்.

தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது என்ற அமைச்சர், தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 6295 இடங்களில் 3184 இடங்கள் காலியாக உள்ளது. தொழில்துறை 4.0 திட்டத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திறன்மிகு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.