சென்னை:

ரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் வரும் 22ந்தேதி முதல் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ டிஜியோ அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூட்டத்தில் போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் கடந்த சில ஆண்டு களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.  ஆனால், அவர்களது கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்ப்பதில்லை. இது தொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில்,  மதுரை ஒத்தக்கடையில் ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம்  நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவு குறித்து, ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப் பாளர்கள்  செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை போராட்டம், நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டதன் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. எங்களின் 7 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு வருகிற 11-ந்தேதிக்குள்  நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால், இந்த மாதம் 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டம் தொடங்குவோம்.

தொடக்கக்கல்வியை உயர்நிலைக்கல்வியுடன் இணைக்கும் முடிவை கைவிடவில்லை என்றால் கல்வித்துறை அமைச்சருக்கு கருப்புக்கொடி காட்டுவோம். அதேபோல பள்ளிக் கல்வித்துறை செயலாளரை வேறு துறைக்கு மாற்ற வேண்டும். அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. வகுப்புகள் தொடங்குவதை கைவிட வேண்டும்.

. 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற  தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்போம். இல்லையென்றால் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கோர்ட்டும், தமிழக அரசும் எங்களை ஏமாற்றி விட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.