சென்னை: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் கலவரத்தை தூண்ட சதித் திட்டம் தீட்டியுள்ளதாக அதிமுக அவைத் தலைவா் மதுசூதனன், அமைச்சா்கள் டி.ஜெயக்குமார், தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் தமிழக காவல்துறை டிஜிபி ஜே.கே.திரிபாதியிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர்.

இந் நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரித்து உள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

அரசியல் நோக்கங்களுக்காக பிற அமைப்பினரை போன்று பெருந்திரளாக கூடி சட்டத்தை கையிலெடுத்து போக்குவரத்தையும், பொது அமைதியையும் பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகள் சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதால் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். மேலும் இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.