டில்லி:

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்ட பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுமீது நடைபெற்ற விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி பகுதியில் சிறுநீரக கோளாறு, சுவாசக் கோளாறு, புற்றுநோய் உள்பட ஏராளமான உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு மக்கள் போராட்டத்தை தொடர்ந்து  சீல் வைக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் பசுமை தீர்ப்பாயம், ஆலையை திறக்க உத்தரவிட்டது. இது தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பை எதிர்த்து,  தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்தது. இந்த மனுமீதான விசாரணை கடந்த மாதம் நடைபெற்றபோது, தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி வழங்காதது தொடர்பாக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், உடனடியாக மின்சாரம் வழங்க உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற  விசாரணையின் போது, ஆலை விதிகளை மீறியதாக அரசு குற்றம்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு ஸ்டெர்லைட் வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளது எனவும் ஸ்டெர்லைட் தரப்பு வாதிட்டது.

ஆனால், ஸ்டெர்லைட் வாதத்தை எதிர்த்து தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், வைகோ போன் றோர் எதிர்வாதம் செய்துவந்தனர். இந்த வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெற்றது    மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று  ஆஜராகி வாதாடினார். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் பல நோய்கள் ஏற்படுவதாக வைகோ மீண்டும் குறிப்பிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.