சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் மாநில மகளிர் கொள்கை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

 தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்  சென்னை தலைமைச்செயலகத்தில் ஜனவரி 23ந்தேதி அன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவையின் கூட்டம்  இதுவரை கூட்டப்படாத நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு சுற்றுப்பயணம் முடிந்து வந்த பிறகு,  பிப்ரவரி மாதம் 2-வது வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், பிப்ரவரி 1-ம் தேதி மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளதால், அதில் கூறப்படும் சாதக பாதகங்களை சேர்த்து, தமிழ்நாடு பட்ஜெட் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநில மகளிர் கொள்கையின் சிறப்புகள்:

1. வளர் இளம் பருவத்தினரிடையே ஊட்டச்சத்து குறைபாடுகள் மூலம் ஏற்படும் விளைவுகளை நேர் செய்வதுடன், ரத்த சோகை மற்றும் குறைந்த எடை போன்ற குறைபாடுகளை பாதியாக குறைப்பது.

2. ஒரு கோடி பெண்களை சுய உதவிக் குழு அமைப்பிற்குள் கொண்டு வருதல். விரிவான வலையம் (network) மற்றும் வழிகாட்டிகள் உருவாக்குதல். தீவிர வழிகாட்டுதல் மூலம் வாழ்வாதார நிலையிலிருந்து குறைந்தபட்சம் 1,00,000 வாழ்வாதார அமைப்புகள் நிறுவனங்களாக நிலை உயர்த்தப்படும்.

3. நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் பெண்களிடையே டிஜிட்டல் பாலின இடைவெளியைக் குறைக்க இணைய சேவைகள் அதிகரிக்கப்படும்.

4. क्र (Data) அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தை எளிதாக்க, அனைத்து அரசுத் துறைகளும் ஆண்டுதோறும் பாலினம் வாரியாக பிரிக்கப்பட்ட தரவுகள் (Data) வழங்கும்.

5. ஒவ்வொரு ஆண்டும் இடைநிற்றல்களை 10% குறைத்தல் மற்றும் மூன்றாம் நிலை சேர்க்கை விகிதத்தை ஒவ்வொரு ஆண்டும் 5% அதிகரித்தல்,.

6. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது சமூகத்தின் பின்தங்கிய பிரிவுகளைச் சார்ந்த 1000 பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு குறிப்பாக அறிவியல், தொழிற்நுட்பம், பொறியியல் மற்றும் கணக்கியல் பாடங்களில் (STEM)ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு ஆதரவு வழங்குதல்.

7. குடும்ப சூழல் காரணமாக வேலையிலிருந்து நின்ற 10,000 பெண்களுக்கு மீண்டும் வேலையில் இணைவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். இவர்களுடைய திறன் இடைவெளியைக் குறைப்பதற்கு பொருத்தமான தொழில்நுட்பப் பயிற்சிகள் மற்றும் விட்ட இடத்தில் மீண்டும் வேலையில் சேர்வதற்கு (lateral entry ) தக்க வாய்ப்புகள் ஏற்படுத்தி தருதல்.

8. மகளிர் வங்கியை நிறுவுவதன் மூலம் வாழ்ந்து காட்டு பெண்ணே எனும் திட்டத்தின் கீழ் கடன் தேவைப்படும் பெண்களுக்கு கடன் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்துதல்.

9. அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் தற்காப்புக் கலைபயிற்சி அளிப்பதன் மூலம் பெண்களின் தன்னம்பிக்கையை உயர்த்துதல்.

நாட்டிலேயே முதன்முறையாக மகளிர் நலனுக்காக தனி கொள்கை தமிழ்நாடு அரசால் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.