சென்னை:

“கழக நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள் – கட்-அவுட் – பிளக்ஸ்கள் வைக்கக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  திமுகவினருக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திமுகவினர்கள் திமுகழக நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள், கட்-அவுட் , பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“கழக நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள் – கட்-அவுட் – பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”

– கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடும் எச்சரிக்கை.

அ.தி.மு.க.வினரின் பேனர் மற்றும் கட் அவுட் கலாச்சாரத்தால் சுபஸ்ரீ என்ற மற்றுமொரு இளம்பெண் உயிர் பலியாகியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று கழக நிர்வாகிகள் அனைவரையும் நான் ஏற்கனவே பல முறை அறிவுறுத்தியிருக்கிறேன். பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைக்கலாமே தவிர, சாலை மற்றும் தெரு நெடுகிலும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் – மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில் வைப்பதை என்னால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது அறவே நிறுத்தப்பட வேண்டும்.

ஆகவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கழக நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது என்று மீண்டும் அறிவுறுத்த விரும்புகிறேன்.இந்த அறிவுரையை யாரேனும் மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நான் பங்கேற்கும் நிகழ்ச்சியாகவோ, கூட்டமாகவோ இருந்தால் அதில் நான் பங்கேற்க மாட்டேன் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைக் கழக, மாவட்டக் கழக, ஒன்றிய, பேரூர், ஊராட்சி, வட்டக் கழக நிர்வாகிகள் அனைவரும் எனது இந்த அறிவுரையை கிஞ்சிற்றும் மீறாமல் கடைப்பிடித்து திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை நிலைநாட்டிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.