சென்னை: மழைவெள்ளத்தை ஆய்வு செய்து துயர் துடைக்கும் முதல்வர் ஸ்டாலின் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி பாராட்டு தெரிவித்து டிவிட் பதிவிட்டு உள்ளார்.

வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்தழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மாநிலம் முழுவதும்  பரவலாக மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் பெய்த கனமழை காரணமாக தலைநகர் சென்னையே வெள்ளத்தில் மிதந்தது. தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு நடத்தி நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்.

இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி டிவீட் செய்துள்ளார். அதில்,  ‘கடந்த 2015ம் ஆண்டை விட தமிழகத்தில் நடப்பாண்டில் அதிக கனமழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு மழையின் அளவு 2015 இல் 518 மில்லி மீட்டராக இருந்தது. 2021 இல் 613 மில்லி மீட்டராக உயர்ந்திருக்கிறது. அதேபோல, சென்னையில் 1,167 மில்லி மீட்டர் 1,121 மில்லி மீட்டராக பெய்திருக்கிறது.

வடகிழக்கு பருவமழை பெய்த காலத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்த 59 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 4 லட்சம் வீதம் ரூ.2.36 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, கால்நடைகளுக்கு 2.84 கோடி ரூபாயும், சேதமடைந்த குடிசைகளுக்கு 1.17 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

கடந்த அ.தி.முக. ஆட்சியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கணக்கெடுத்து கண்காணித்திருந்தால் இந்த அளவிற்கு கூட பாதிப்பு வந்திருக்காது.

கடந்த ஆட்சிக் காலத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வெள்ளப் பகுதிகளை ஹெலிகாப்டரில் பறந்து பார்வையிடுவார். இல்லையெனில் தமது சொகுசு வாகனத்தில் பயணம் செய்து மக்களுக்கு ஆறுதல் கூறுவார்.

ஆனால், இன்றைய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களின் துயரைத் துடைக்கிறார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.க. தலைவர்கள் கடுமையான விமர்சனத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

2015 வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பாதிப்பை மக்கள் மறக்க மாட்டார்கள். அரசியல் எல்லைகளைக் கடந்து பாடுபடுகிற தமிழக முதலமைச் சருக்கு பேரிடர் காலங்களில் உறுதுணையாக இருப்பது அரசியல் கட்சிகளின் கடமையாகும். அந்த வகையில் எதிர்க்கட்சியாக இருக்கிற அ.தி.மு.க.விற்கும் இது பொருந்தும்.’ ‘

இவ்வாறு கூறியுள்ளார்.