சென்னை: தமிழ்நாடு அரசு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பால் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்று மக்களை கூறி வந்த நிலையில், தற்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளை ஒரே இணைப்பாக்க உத்தரவிட்டுள்ளது.  தமிழகமக்களை ஏமாற்றி, அவர்களின் தலையில் மேலும் சுமையை ஏற்றி உள்ளது.

தமிழகம் முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இந்த நிலையில்தான் திமுக அரசு, மின்சார எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் உத்தரவிட்டு, அதற்கான   சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வந்தது. இதற்கான அவகாசம் பிப்வரி மாதத்துடன் முடிவடைந்துள்ளது.

இந்த இணைப்பு தொடர்பாக ஏற்கனவே பலமுறை  விளக்கம் அளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழ்நாடு முழுவதும் வழங்கப்படும் இலவச மின்சாரம் மற்றும்,   மின் நுகர்வோர் குறித்து உரிய டேட்டாக்கள் இல்லை என்று கூறப்படுகிறது.  அதை பெறவே,  ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்களை இணைக்கும் பணிகளைத் தமிழ்நாடு மின்வாரியம் செய்து வருகிறது, வேறு ஏதும் கிடையாது என்று கூறியிருந்தார்.

அதுபோல ஏற்கனவே, மின்கட்டணம் உயர்வு குறித்து மக்கள் கருத்து கேட்டுதான் முடிவு எடுப்போம் என்று கூறிய அமைச்சர், மக்களின் கருத்தை மீறி மின் கட்டணத்தை உயர்த்தினார்.  அமைச்சர் செந்தில்பாலாஜி மக்களை ஏமாற்றி, கட்டணங்களை உயர்த்தி வருவது  தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், திமுக அரசு மீதான நம்பகத்தன்மை மீதும் கேள்வி எழுப்பி வருகிறது.  தற்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளை ஒரே மின்சார இணைப்பாக மாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் வாடகைதாரர்கள் பாடு இனிமேல் கஷ்டம்தான்.

ஏற்கனவே கடுமையான மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்கள், இனிமேல் மேலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரே வீட்டில், ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளை ஒரே மின்சார இணைப்பாக மாற்ற மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

இதுதொடர்பாக தமிர்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரே வீட்டில், ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளை ஒரே மின்சார இணைப்பாக மாற்ற மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. நுகர்வோர் இணைப்பதற்கு முன்வரா விட்டால் அதை 1-டி கட்டண விகித பட்டியல் ஆக மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.

மேலும், குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின்சார இணைப்பு 1டி கட்டண விகித பட்டியலாக மாற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் 10-ந்தேதி வெளியிட்ட கட்டண விகித பட்டியல் மாற்ற உத்தரவில் பிரிவு 5.8.5 அல்லது 8.6-ன் படி ஒரு வீட்டில் அல்லது ஒரு குடியிருப்பில் அல்லது ஒரு இடத்தில் 2 மின் இணைப்புகளை வழங்குவது பற்றியும், ஏற்கனவே 2 அல்லது அதற்கு மேற்பட்ட மின் இணைப்பு இருந்தால் அவற்றை இணைப்பது பற்றியும் மின்வாரியத்துக்கு அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி, ஒரு வீடு அல்லது ஒரு குடியிருப்பு அல்லது ஒரு இடத்திற்கு ஒரு மின் இணைப்பு மட்டுமே தரப்பட வேண்டும். ஏற்கனவே ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பு கொடுக்கப்பட்டு இருந்தால், அதை முறையான நோட்டீஸ் கொடுத்து கட்டண விகித பட்டியல் படி 1ஏ-ல் ஒரே மின் இணைப்பாக ஆக்க வேண்டும்.

நுகர்வோர் இணைப்பதற்கு முன்வரா விட்டால் அதை 1-டி கட்டண விகித பட்டியல் ஆக மாற்ற வேண்டும். மேலும் மின் வாரியம் மின்இணைப்பு கொடுக்க அந்தப்பகுதி வாடகை ஒப்பந்தம் அல்லது குத்தகை ஒப்பந்தம் இருக்க வேண்டும்

சிலர் ஒரே வீட்டில் சொந்த பந்தங்களாக, அண்ணன்- தங்கைகள், அக்காள்- தம்பிகள், தந்தை- மகன், தந்தை- மகள் என்று தனித்தனி குடும்பமாக வாழலாம். அங்கு வாடகை ஒப்பந்தமோ, குத்தகை ஒப்பந்தமோ வருவதற்கு வாய்ப்பு இல்லை. இதனால், இதுபோன்ற குடும்பங்கள் உள்ள முறையாக பிரிக்கப்பட்ட குடியிருப்பில் அங்கு மற்றொரு கூடுதல் மின் இணைப்பு 2004 மின் பகிர்மான விதியின்படி பெற்றிருந்தால் அம்மாதிரி இடங்களில் தனி ரேஷன் கார்டு இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

இதன் நோக்கம் என்னவெனில் 100 யூனிட் மானியம் என்பது முறையாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின்சார இணைப்பு 1டி கட்டண விகித பட்டியலாக மாற்றப்பட வேண்டும்.

ஒரு குடும்பம் உள்ள வீடு அல்லது இடம் அல்லது குடியிருப்பில் கூடுதலாக இருக்கும் மின்சார இணைப்புகளை ஒன்றிணைக்க வேண்டும் அல்லது அவை 1டி கட்டண விகித பட்டியலாக மாற்றம் செய்ய வேண்டும்.

அதாவது ஒரு மின்சார இணைப்பு மட்டுமே 1ஏ-வில் கட்டண விகித பட்டியலாக இருக்க வேண்டும். இது முறையாக தெளிவாக ஆய்வு செய்து அறியப்பட்டு பின்பு அமல்படுத்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

திமுக அரசு பதவி ஏற்றது முதல், வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டணம், கழிவுநீர் வரி என பெரும்பாலான வரிகள் உயர்த்தப் பட்டுள்ள நிலையில், தற்போது மின் இணைப்புகளையும் ஒரே இணைப்பாக மாற்ற உத்தரவிட்டு, நடுத்தர மற்றும் ஏழை மக்களின் தலையில் மேலும் ஒரு இடியை இறக்கி உள்ளது.  பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்பட சில இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வரும் மாநில அரசு, மற்றொருபுறம் வரிகளை உயர்த்தி மக்கள் வயிற்றில் அடித்து வருகிறது என்பதே உண்மை நிலவரம்.

தமிழக அரசியல் கட்சிகளின் அநாகரிக அரசியலால் கட்டுமானம் உள்பட தொழில்துறை முடங்கும் அபாயம்!