சென்னை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று  சென்னை – ஆயிரம்விளக்கு மேற்கு பகுதி, சேத்துப்பட்டு அட்டன் இரவு பாடசாலை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் – கடம்பத்தூர் ஓன்றியம், வெண்மண புதூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள நூலகங்களுக்கு 900க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வருபவர்கள், அவருக்கு சால்வை, மாலைகள் போர்த்துவதற்கு பதிலாக புத்தங்களை வழங்குமாறு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, அவரை சந்திக்க வருபவர்கள் வழங்கிய புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தன.

இதைத்தொடர்ந்து,  சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், ஸ்டாலினை நேரில் சந்தித்தும் தங்கள் பகுதிகளுக்கு அந்த புத்தகங்களின் ஒரு பகுதியை வழங்கிடுமாறு  கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது. அதை ஏற்று தமிழகத்தில் உள்ள பல்வேறு  நூலகங்களுக்கு ஆயிரக்கணக்கான நூல்களை வழங்கி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை மேற்கு மாவட்டம், ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, ஆயிரம்விளக்கு மேற்கு பகுதியில் உள்ள 110வது வட்டம், சென்னை-31, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோடு 7வது அவென்யூ, அப்பாசாமி தெருவில் உள்ள “அட்டன் இரவு பாடசாலை”யில் உள்ள நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கிடுமாறு தலைமை நிலையச் செயலாளர் கு.க.செல்வம், எம்.எல்.ஏ., – ஆயிரம்விளக்கு மேற்கு பகுதிச் செயலாளர் ஜெ.எஸ்.அகஸ்டின்பாபு மற்றும் வட்டச் செயலாளர் ஜெ.இருதயநாதன் ஆகியோர் கழகத் தலைவர் அவர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்று, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (2-10-2019) காலை, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், “அட்டன் இரவு பாடசாமி” நிர்வாகத்தினரிடம் 700-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கினார்.

அதுபோலவே, திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கடம்பத்தூர் ஊராட்சி, வெண்மணம்பூதூர் அரசு நூலத்திற்கு புத்தகங்கள் வழங்கிடுமாறு, கழகத் தலைவர் அவர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (2-10-2019) காலை, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், “வெண்மணம்பூதூர் கிராம அரசு நூலத்திற்கு” நிர்வாகத்தினரிடம் 200-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கினார்.

ஆக மொத்தம் இன்று மட்டும் 900க்கும் மேற்பட்ட புத்தகங்களை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சேத்துப்பட்டு மற்றும் திருவள்ளூர், கடம்பத்தூர் ஊராட்சி அரசு நூலகம் ஆகிய இரண்டு நூலகங்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, மத்திய சென்னை தொகுதி கழக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், தலைமை நிலையச் செயலாளரும் – ஆயிரம்விளக்கு தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான கு.க.செல்வம், ஆயிரம்விளக்கு மேற்கு பகுதிச் செயலாளர் ஜெ.எஸ்.அகஸ்டின்பாபு, 110வது வட்டச் செயலாளர் ஜெ.இருதயநாதன் மற்றும் கடம்பத்தூர் ஊராட்சி, வெண்மணம்பூதூர் நூலகர் தி.கணேசன் மற்றும் கடம்பத்தூர் கிழக்கு ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் வெண்மணம் ம.கோபிநாத் ஆகியோர் உடனிருந்தனர்.