சென்னை: அரசு பேருந்துகளில் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், இன்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அதன்படி, 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டதுடன், அவர்களை எச்சரித்தும், இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்து படிக்கட்டில் நின்றுகொண்டு பயணம் செய்வதை தடுக்க இன்று போக்குவரத்து காவல்துறை சென்னையின் பல இடங்களில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து,   இனிமேல் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தால் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்துக்கு காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்வதை தடுக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பாக தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்து வழித்தடங்களில் சோதனை நடத்தி, படியில் பயணம் செய்யும் மாணவர்களை பிடித்து போக்குவரத்து காவல் துறையினர் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். எனினும் மாணவர்கள் மீண்டும் பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்து வருகின்றனர்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் அறிவுறுத்துதலின் படியும், சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையாளர் கபில்குமார் சி சரட்கர் மேற்பார்வையிலும் சென்னை முழுவதும் நேற்று (18.04.2022) போக்குவரத்து காவல் துறையினரால் மாநகர பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்த 111 பள்ளி மாணவர்களும் 43 கல்லூரி மாணவர்களையும் பேருந்துகளிலிருந்து கீழே இறக்கி விட்டு அந்த மாணவர்களின் பெயர் மற்றும் முழு முகவரி, பள்ளி மற்றும் கல்லூரியின் அடையாள அட்டை மூலம் சரிபார்த்து பெற்று, அந்த மாணவர்களின் பெற்றோருக்கும், சம்மந்தப்பட்ட பள்ளி கல்லூரி முதல்வர்களுக்கும் கடிதம் மூலமாக தெரிவிக்கப்பட்டது.

படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்வதால் உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்தும், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் பற்றியும் மாணவர்களிடம் எடுத்து கூறி போக்குவரத்து காவல்துறை யினர் அவர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினர். கடைசி நேரத்தில் பள்ளிகளுக்கு பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு வேகமாக செல்லும் பெற்றோரை நிறுத்தி காவல் துறையினர் அறிவுரைகளை வழங்கினர். மேலும் பள்ளி நேரத்தில் ஒரு வழிப்பாதையில் பயணம் செய்தவர்கள் மீதும், ஆட்டோக்களில் அதிமாக மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற ஓட்டுநர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நேற்று மட்டும் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் அல்லாத 60 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராம் விதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் இது போன்று படிகளில் தொங்கிக் கொண்டு பயணிக்கும் மாணவர்கள் மீது தகுந்த வழக்குகள் பதியப்படும் என்று போக்குவரத்து காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.