சென்னை:

மிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 29ந்தேதி வெளியான நிலையில், மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது குறித்து தமிழக தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி தேர்வர்கள்  இன்றுமுதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மதிப்பெண்கள் குறித்து சந்தேகம் உள்ள மாணவ மாணவிகள் இன்று முதல் மறுகூட்டல், மறுமதிப்பீடு குறித்து விண்ணப்பிக்கம்.

ஏற்கனவே தமிழகஅரசு அறிவித்தபடி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இன்று பிற்பகல் முதல்  தாங்கள் படித்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமாகவும்  பெற்றுக் கொள்ளலாம்.

மே 6-ஆம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மே 2-ஆம் தேதி வியாழக்கிழமை முதல் மே 4-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.45 மணி வரை பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்களது தேர்வு மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

மறுகூட்டலுக்கு மொழிப்பாடத்துக்கு (பகுதி 1)- ரூ.305, ஆங்கிலப் பாடத்துக்கு (பகுதி- 2)- ரூ.305, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு தலா ரூ.205, விருப்ப மொழிப் பாடத்துக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்தக் கட்டணத்தை பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்களது தேர்வு மையங்களிலும் பணமாகச் செலுத்த வேண்டும். அப்போது கொடுக்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.