கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறியதமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்புதான் தமிழக மீனவர்கள் சிலரை இலங்கை கடற்படை விடுவித்த நிலையில், தற்போது மீண்டும் கைது செய்துள்ளது.

தமிழக கடற்பகுதி மற்றும் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த  ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை, அங்கு ரோந்த வந்த  இலங்கை கடற்படை, அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி கைது செய்து  சிறைபிடித்துள்ளது.  கைது செய்யப்பட்டுள்ள 6 மீனவர்கள் மற்றும் அவர்களின் 2 படகுகளும்  பறிமுதல் செய்யப்பட்டு,, கொழும்பு  காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து  தகவல் அறிந்த சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 30 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்து.