ராமேஸ்வரம்:

கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் ஆயிரம் பேரை இலங்கை கடற்படை விரட்டியடித்தது.

ராமேஸ்வரத்தில் இருந்து 400 விசைப்படகுகளில் ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இன்று கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கல், பாட்டில்களை வீசி தாக்கினர்.

இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கரை திரும்பினர். இது குறித்து மீனவர்கள் கூறுகையில், ‘‘இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் மீன்பிடிப்பதை பாதியிலேயே நிறுத்திவிட்டு நஷ்டத்துடன் கரை திரும்பிவிட்டோம். ஏற்கனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 60-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தனர்.