ராமேஸ்வரம்,

ல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடுக்கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் எட்டு பேரை, எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி  இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படை குறித்து மத்திய மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க மறுத்து வருகிறது. இதன் காரணமாக இலங்கையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வழக்கம்போல நேற்று  ராமேஸ்வரத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.

மீனவர்களின் படகு, வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தியதுடன், மீனவர்கள் எட்டு பேரையும் சிறைப்பிடித்துச் சென்றனர். அத்துடன், தங்கச்சிமடத்தை சேர்ந்த விசுவாசம் என்பவரின் படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களை மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகை கொண்டாடும் வேளையில் மீனவர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.