சென்னை

கொரோனா பணக்காரர்களால் பரவிய நோய் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர், “கொரோனாவை தமிழக அரசு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இன்று 63 பேர் கொரோனாவிலிருந்து குணம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். இன்னும் நான்கைந்து நாட்களுக்குள் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் குணமடைவர்” எனக் கூறினார்.

மேலும் பிற மாநிலங்களுக்கு முன்பே தமிழகம்தான் கொரோனா தடுப்பு நடவடிக்கையை விரைந்து தொடங்கியது எனவும் முதல்வர் கூறினார்.

“கொரோனா என்பது பணக்காரர்களால் பரவிய நோய். வெளிநாடுகளில் இருந்து, வெளி மாநிலங்களில் இருந்து வந்த பணக்காரர்களால் தான் கொரோனா பரவியது. ஆயினும் அரசின் துரித நடவடிக்கைகளால் அந்நோய் பரவுவது பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.

இன்று ஒரே நாளில் தமிழகத்தில்  62 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.