நெல்லை

நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

வருகிற 22ஆம் தேதி (புதன்கிழமை) அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெறுகிறது.  விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். எனவே பக்தர்களின் வசதிக்காக நெல்லை-திருச்செந்தூர் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”நெல்லையில் இருந்து காலை 6.40 மணிக்கு (வண்டி எண்:06857) சிறப்பு ரயில் புறப்பட்டு காலை 8.15 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும். மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து (வண்டி எண்:06858) சிறப்பு ரயில் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு நெல்லையை காலை 10.50 மணிக்கு வந்தடையும்.

நெல்லையில் இருந்து (வண்டி எண்:06859) சிறப்பு ரயில் மதியம் 11.25 மணிக்கு புறப்பட்டு 1 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும். திருச்செந்தூரில் இருந்து (வண்டி எண்: 06860) சிறப்பு ரயில் மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு நெல்லையை வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, நாசரேத், கச்சனாவிளை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் 5 பொதுபெட்டிகள் மற்றும் ஒரு லக்கேஜ் வசதியுடன் கூடிய பெட்டி இணைக்கப்பட்டு இருக்கும்.”

என்று கூறப்பட்டுள்ளது.