தூத்துக்குடி

தெற்கு ரயில்வே நாளை முதல் தூத்துக்குடியில் ரயில் சேவை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. 

கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் அதி கனமழை பெய்தது. இவ்வாறு இடைவிடாமல் பெய்த மழையால் தூத்துக்குடி நகரமே வெள்ளத்தில் மூழ்கியது.

தற்போது மழை நின்றும் தூத்துக்குடி மாநகரில் மழைநீர் வடியாமல் தொடர்ந்து மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். இந்த தொடர் மழையால் தூத்துக்குடியில் பேருந்து மற்றும் ரயில் சேவை நிறுத்தப்பட்டன.

மக்கள் மழை வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். மீட்ப் மற்றும் நிவாரணப் பணிகள் தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் ராணுவத்தினரால் நடந்து வருகிறது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி ரயில் நிலைய சீரமைப்பு பணி நிறைவடைந்துள்ளதால் நாளை முதல் ரயில் சேவை தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் திருச்செந்தூர் ரயில் வழித்தடத்தில் தண்டவாளத்தில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருவதால் இன்னும் ஒரு வாரத்தில் திருச்செந்தூரில் ரயில் சேவை தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.