கோவை

தென் இந்தியாவின் முதல் திரையரங்கமான டிலைட் அரங்கம் இடிக்கப்படுகிறது.

நமது நாட்டில் திரைப்படம் நுழைந்த காலத்தில், தென் இந்தியாவில் கோவையில் அதிக அளவில் ஸ்டூடியோ, திரையரங்கங்கள் அமைக்கப்பட்டன. தென் இந்தியாவில் முதன்முதலில் கோவையில் 1914-ம் ஆண்டு திரையரங்கம் கட்டப்பட்டு’டிலைட்’ என்று பெயரிடப்பட்டது.  அதை சாமிக்கண்ணு வின்செண்ட் என்பவர் கட்டினார்.

தென் இந்திய ரயில்வே ஊழியராக இருந்த சாமிக்கண்ணு வின்சென்ட், பிரெஞ்சுக்காரரான டூ பாண்ட்டுவிடம் ஊமை படங்களை விலைக்கு வாங்கி காட்சிப்படுத்தி வந்தார். பிறகு அவர் படங்களைப் பொதுமக்களுக்கு காட்டும் முறையில் சில புதுமைகளை அறிமுகப்படுத்தினார்.

முதலில் துணிகளைக் கட்டி அமைக்கப்பட்ட டென்ட் திரைப்படம். காலியிடங்களில் கூடாரம் அமைத்து திரைப்படங்களை காட்சிப்படுத்தினார். இந்த டென்ட் சினிமா தமிழ்நாடு மட்டுமின்றி பர்மா, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கும் பயணித்து மக்களிடம் பிரபலமடைந்தது.

நிரந்தரமாக ஒரு கட்டிடம் கட்டி திரைப்படங்களைக் காட்ட வேண்டும் என்று எண்ணிய சாமிக்கண்ணு வின்சென்ட் கடந்த 1914-ல் ‘வெரைட்டிஹால் திரையரங்கம்’ என்ற பெயரில் நிரந்தர திரையரங்கம் ஒன்றை கோவையில் உருவாக்கினார். தற்போது அது டிலைட் தியேட்டர் என அழைக்கப்படுகிறது.

இங்கு முதன்முதலில் வள்ளி திருமணம் படம் திரையிடப்பட்டது.  இந்த சாலை தற்போதும் வெரைட்டிஹால் ரோடு என்றே அழைக்கப்படுகிறது. டிலைட் திரையரங்கம் தென்னிந்தியாவின் முதல் நிரந்தர தியேட்டர் என அழைக்கப்படுகிறது.  நூற்றாண்டைக் கடந்த இந்த திரையரங்கத்தில் தொடர்ந்து திரைப்படங்கள் திரையிடப்பட்டு வந்தன.

பல புதிய திரைப்படங்கள் வந்தாலும், இந்த திரையரங்கத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி, விஜயகாந்த் போன்ற நடிகர்களின் பழைய படங்கள் தான் அதிக அளவில் திரையிடப்பட்டு வந்தது.  டிலைட் அரங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு எம்.ஜி.ஆர். நடித்த நினைத்ததை முடிப்பவன் படம் திரையிடப்பட்டது.

இக்க் தொடர்ந்து படங்கள் திரையிடப்பட்டாலும் 2023-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பின் இங்குப் படம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. போதிய வருமானம் இல்லாததாலும், சரிவர பராமரிக்காததாலும் நூற்றாண்டு பழமை வாய்ந்த மற்றும் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கமான டிலைட் அரங்கத்தை இடிக்க உரிமையாளர்கள் முடிவு செய்து அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இங்கு வணிக வளாகம் அமைக்க உள்ளதாகத் தெரிகிறது. அந்த வணிக வளாகர்க்தில் ஒரு மினி திரையரங்கம் அமைக்க வேண்டும் என்று திரையரங்கத்தில் பணியாற்றிய ஊழியர்கள் கூறுகிறார்கள். கோவையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த டிலைட் அரங்கம் இடிக்கப்படுவது திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.