கடந்தாண்டு தீபாவளிக்கு ஓ.டி.டி தளத்தில் வெளியாகி பலருடைய பாராட்டுக்களை பெற்ற படம் சூரரைப் போற்று. கொரோனா முதல் அலையால் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியாமல் போனது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படம் 2021-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. இறுதிப் போட்டி வரை சென்ற இந்த படம், பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறாமல் போனது.

இந்நிலையில், ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா, வருகிற ஜுன் 11 ம் தேதி துவங்கி 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காலம் என்பதால், ஷாங்காய் திரைப்பட விழா இந்த ஆண்டு கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட உள்ளதாம்.

சர்வதேச வெளியீட்டை கருத்தில் கொண்டு ‘சூரரைப் போற்று’ என்கிற தமிழ் டைட்டில் ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்துள்ளனர் படக்குழுவினர். அதன்படி ‘Praise the Brave’ என ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.