டில்லி

மிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ரூ.4800 கோஒடி ஊழல் வழக்கு விசாரணை தொடங்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழகத்தில் நெடுஞ்சாலை டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகவும் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.

இந்த புகார் மனுவில் எடப்பாடி பழனிசாமி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்று ஆர்.எஸ்.பாரதி புகார் தெரிவித்திருந்தார்.

இவ்வழக்கில் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெகதீஸ் சக்ரா, புகார் மீதான விசாரணையை வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாகவும், மேற்கொண்டு வழக்கில் நீதிமன்றம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டில் இவ்வழக்கில் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

தமிழக அரசு சார்பில் இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதால் இவ்வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் முறையிடப்பட்டது.  இதையொட்டி இந்த வழக்கு விரைவில் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உறுதி அளித்துள்ளார்.