ஈரோடு:
ருத்து சுதந்திரத்தின் ஆபத்தான வடிவங்களாக சமூக வலைதளங்கள் இருந்து வருகின்றன என்று தந்தி   தொலைக்காட்சி முதன்மை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே பேசினார்.
ஈரோடு புத்தகத் திருவிழாவையொட்டி  நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு “கருத்து (சு)தந்திரம்” என்னும் தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது. அதில் பாண்டே பேசியதாவது:
“கருத்து, சுதந்திரமானதாக இருந்தால் மட்டும் போதாது. அது நியாயத்தோடும், நடுநிலைமையோடும், அடுத்தவர் மனம் புண்படாதபடியும் இருக்க வேண்டும். உள்நோக்கத்தோடு பேசப்பட்டால் அது கருத்துச் சுதந்திரம் அல்ல, அது கருத்து தந்திரம்தான்.
ஊடகங்கள் கேள்விக்கு அப்பாற்பட்டு இருக்கக் கூடாது. பல துறைகளைப் பார்த்து கேள்வி கேட்போம். ஆனால், நாங்கள் கேள்விக்கு அப்பாற்பட்டவர்கள் என செய்தியாளர்கள் கருதக்கூடாது.

ரங்கராஜ் பாண்டே (முகநூல் பக்கம்)
ரங்கராஜ் பாண்டே (முகநூல் பக்கம்)

புத்தகங்களுக்குத் தடை இருக்கக் கூடாது. ஆனால், அது ஆய்வுக் கட்டுரையா அல்லது புனைக் கட்டுரையா என்ற தெளிவு இருக்க வேண்டும். படைப்பாளிகளும், பத்திரிகையாளர்களும் தாங்கள் வெளியிடும் செய்திக்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்” என்று பேசிய பாண்டே, அடுத்ததாக  சமூகவலைதளங்கள் பற்றி பேசினார்:
“சாமானியர்களின் ஊடகமாக இருக்க வேண்டிய (ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற)   சமூக வலைதளங்கள் அப்படி இல்லை. எதைப்பற்றி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற நிலை அங்கே  உள்ளது. மனித மனதுக்குள் எவ்வளவு வன்மம் இருக்கிறது, ஜாதியும், மதமும் எவ்வளவு ஆழமாக ஊடுருவி இருக்கின்றன என்பதை சமூக வலைதளங்கள் வெளிப்படுத்துகின்றன.
தனிப்பட்ட தாக்குதல்கள் சமூக வலைதளங்களில் அதிகரித்துள்ளது.  எந்தக் கருத்தையும் உறுதி செய்யாமல் அப்படியே மற்றவர்களுக்கு அனுப்புவது தவறு.    இதனால், ஜாதி, மத கலவரங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பொடா, தடாவை விட கொடுமையான சட்டங்களாக சமூக வலைதளங்கள் இருந்து வருகின்றன. சமூக சிக்கல்களுக்கு காரணமாக அவை அமைகின்றன. கருத்துச் சுதந்திரத்தின் ஆபத்தான வடிவமாக சமூக வலைதளங்கள் விளங்குகின்றன” என்று ரங்கராஜ் பாண்டே பேசினார்.