கமதாபாத்

கமதாபாத் நகரில் நேற்று திறக்கப்பட்ட தன்வந்திரி கொரோனா மருத்துவமனையில் இதுவரை ஒரு நோயாளி கூட அனுமதிக்கப்படவில்லை.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவல் மிகவும் அதிகரித்துள்ளதால் அனைத்து மாநிலங்களும் கொரோனா சிகிச்சை மருத்துவமனைகள் அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.    ஆயினும் கொரோனா நோயாளிகள் மேலும் மேலும் அதிகரிப்பதால் பல மருத்துவமனைகளில் படுக்கைகள் காலி இல்லை என நோயாளிகள் அனுமதிக்கப்படுவது இல்லை.,

குஜராத் மாநிலத்தில் தன்வந்திரி மருத்துவமனை என்னும் மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்காக 10 நாட்களில் அமைக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்துள்ளது.   இந்த மருத்துவமனை அமைக்கும் பணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம், (டி ஆர் டி ஓ), ஆகியோருடன் குஜராத் பல்கலைக்கழகம், குஜராத் அரசு ஆகியோர் இணைந்து குஜராத் பல்கலை கண்காட்சி அரங்கில் அமைத்துள்ளனர்.

இந்த மருத்துவமனை அனைவருக்கும் இலவச சிகிச்சை வழங்க அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.   இங்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 900 படுக்கைகள் உள்ளன.  அவற்றில் 150 படுக்கைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் ஆகும்.   இந்த மருத்துவமனையில் சேர மக்களில் பலர் விரைந்து சென்ற போது அவர்கள் நுழைவாயிலில் திருப்பி அனுப்பப்படுவதால் இங்கு இன்னும் நோயாளிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை,.

குஜராத்தின் பல மாவட்டங்களிலும் ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை உள்ளதால் பல நோயாளிகள் தங்கள் உறவினர் துணையுடன் இங்கு வந்து  திரும்பிச் செல்லுகின்றனர்.  இதனால் கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பெரும் அவதியுற்றுள்ளனர்.  இதற்குக் காரணம் ஆக்சிஜன் விநியோகம் முழுமையாகாமல் இந்த மருத்துவமனை திறக்கப்பட்டது எனச் சிலர் தெரிவிக்கின்றனர்.

இந்த மருத்துவமனை நிர்வாக அதிகாரி மூத்த அரசு அதிகாரி அஞ்சு சர்மா, “நேற்று மருத்துவமனையில் ஆக்சிஜன் சரியான அளவு அழுத்தத்துடன் படுக்கைகளுக்கு வரவில்லை.  எனவே நாங்கள் நோயாளிகள் யாரையும் அனுமதிக்கவில்லை.  இதே நிலை இன்றும் தொடர்கிறது.  இன்று இரவுக்குள் இது சரி செய்யப்பட்டு நாளை முதல் அனுமதி தொடங்கும்.

இந்த மருத்துவமனையில் நாங்கள் நேரடியாக நோயாளிகளை அனுமதிப்பது இல்லை,.  108 ஆம்புலன்ஸ் மூலம் கொரோனா பாசிடிவ் சான்றிதழுடன் வருவோர் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர்.  மற்றும் மாநில அரசு சுகாதாரத் துறை கொரோனா சிகிச்சை பிரிவினர் இங்கு நோயாளிகளை அனுப்பி வைக்க உள்ளனர். “ எனத் தெரிவித்துள்ளார்.