சென்னை: தமிழ்நாடு அறிவித்துள்ள பெண்களுக்கான  இலவச பேருந்து மூலம் இதுவரை  233 கோடியே 71 லட்சம்  பேர்  பயணம் செய்துள்ளனர் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்த ஆண்டு பெண்களுக்கான இலவச பேருந்துதிட்டம் அமல்படுத்தப்பட்டது. மேலும்,  புதுமை பெண் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தமிழக  மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுதொடர்பாக ஈரோட்டில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும்  போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறினார்.  அப்போது ,  ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஆதரவு கேட்டு செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு இலவச பயணம், புதுமை பெண் திட்டம் போன்றவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இலவச பேருந்து திட்டத்தில் இதுவரை 233 கோடியே 71 லட்சம் முறை பெண்கள் அரசு பஸ்சில் இலவச பயணம் செய்துள்ளனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 லட்சம் பெண்கள் இலவச பயணம் செய்து வருகின்றனர். இலவச பேருந்து பயண திட்டம் ஏழை பெண்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இதன் மூலம் 800 முதல் ஆயிரம் ரூபாய் வரை குடும்பத்திற்கு மிச்சப்படுகிறது என்றார்.