சென்னை

சிவசங்கர் பாபாவின் பெண் பக்தையும் சுஷில் ஹரி பள்ளியின் முன்னாள் மாணவியுமான சுஷ்மிதா என்பவர் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுஷில்ஹரி பள்ளியின் நிறுவனரும் தன்னை கடவுள் என சொல்லிக் கொள்பவருமான சிவசங்கர் பாபா தனது பள்ளி மாணவிகளிடம் பாலியல்  தொந்தரவு செய்ததாகப் புகார்கள் எழுந்தன.  இதையொட்டி விசாரணை செய்த காவல்துறையினரிடம் சிவசங்கர் பாபா டேராடூனில் சிகிச்சைக்குச் சென்றுள்ளதாகத் தெரியப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் வழக்கு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது.   சிபிசிஐடி காவல்துறையினர் டேராடூன் சென்று சிவசங்கர் பாபாவைக் கைது செய்ய முயன்றனர்.   ஆனால் அங்கிருந்து தப்பி ஓடிய சிவசங்கர் பாபா டில்லியில் பிடிபட்டு கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.   இந்நிலையில் சுஷில்ஹரி பள்ளியின் முன்னாள் மாணவியும் சிவசங்கர் பாபாவின் பக்தையுமான சுஷ்மிதா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுஷ்மிதா மீது சிவசங்கர் பாபாவுக்கு மாணவிகளைச் சேர்க்க உதவி செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.   சிவசங்கர் பாபா விரும்பும் பெண்களிடம் பேசி மூளைச்சலவை செய்து  சுஷ்மிதா அவர்களை அவரிடம் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.   சுஷ்மிதாவை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.