சென்னை: “பேட்டி என்ற பெயரில் சூட்டிங் செய்திருக்கிறார் பிரதமர் மோடி” என பிரதமர் மோடி சமீபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.
ஜூன் 3 – நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு! ஜூன் 4 – இந்தியாவின் புதிய விடுதலையின் துவக்க நாள்! நம்மை எல்லாம் ஆளாக்கிய தலைவர் கலைஞர், தன் வாழ்நாள் எல்லாம், எந்த ஜனநாயகத்தைக் காக்கப் பாடுபட்டாரோ – எந்த மதச்சார்பின்மையை உறுதியுடன் நிலைநாட்டினாரோ – ”மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!” என்று தனது இறுதி மூச்சுவரை முழங்கினாரோ – அவற்றைப் பாதுகாக்கும் இந்தியா கூட்டணியின் வெற்றியை, கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் பரிசாக வழங்குவோம்.
“மக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் மதவாதத்திற்குத்தான் நாங்கள் எதிரிகளே தவிர, மதத்திற்கு எதிரிகள் அல்ல!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு வாக்குச்சேகரித்த முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தீபஒளி தரும் திருவண்ணாமலைக்கு வந்திருக்கிறேன்! நூற்றாண்டைக் கண்ட திருவண்ணாமலை நகராட்சியை “திருவண்ணாமலை மாநகராட்சி”-ஆக மாற்றிய உங்கள் ஸ்டாலின் வந்திருக்கிறேன். பட்டுக்கும், அரிசிக்கும் பெயர் பெற்ற ஆரணிக்கு வந்திருக்கிறேன். இங்கு நடப்பது, எழுச்சிமிகு கூட்டம் என்று சொல்லவா! மாநாடு என்று சொல்லவா! அதையும் தாண்டி மாநில மாநாடு என்று சொல்லவா! திருவண்ணாமலையில் கடல் புகுந்துவிட்டது என்று சொல்லவா… என்பதைப்போல் கூடியிருக்கும் அனைவருக்கும் என் மாலை வணக்கம்!

என்னையும் – உங்களையும் எப்படி பிரிக்க முடியாதோ! அதேபோன்று, தி.மு.க.வையும் – திருவண்ணாமலையையும் பிரிக்க முடியாது. தி.மு.க.வுக்கு, திருவண்ணாமலை என்றாலே வெற்றிதான். முதன்முதலாக, தி.மு.க. 1957 தேர்தலில் போட்டியிட்டபோது, 15 பேர் வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டுச் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்கள். அவர்களில் நூற்றாண்டு காணும், ப.உ.சண்முகம் உள்ளிட்ட ஆற்றல்மிகு உறுப்பினர்களைத் தந்த மண் இது! நாடாளுமன்றத்திற்குள் நாம் முதன்முதலில் அடியெடுத்து வைத்தபோது, இரண்டு எம்.பி.க்கள் அதில் ஒருவரான, இரா.தர்மலிங்கம் அவர்களைத் தந்த மண் இது! இவர்களை மட்டுமல்ல, பி.எஸ்.சந்தானம், களம்பூர் அண்ணாமலை தொடங்கி… இன்று எதிலும் வல்லவராக விளங்கும் நம்முடைய எ.வ.வேலு உள்ளிட்ட எண்ணற்ற தளகர்த்தர்களைத் தந்துள்ள மண், இந்தத் திருவண்ணாமலை மண்! அதேபோல், தி.மு.க. வளர்ச்சியில், ஒவ்வொரு கட்டத்திலும் இந்தப் பகுதி மக்கள் உற்றத் துணையாக இருந்திருக்கிறார்கள்.

திமுகவுக்கும் திருவண்ணாமலைக்கான தொடர்பை நான் சொல்ல வேண்டும் என்றால், 1965 மொழிப்போருக்கு வித்திட்ட 1957-ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாடு நடந்த இடம்! 1967 தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாக இருந்த 1963 இடைத்தேர்தல் வெற்றி கிடைத்த இடம்! 2021 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு வித்திட்ட ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பயணம் தொடங்கிய இடம் என்று, வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால், தி.மு.க.வும் – திருவண்ணாமலையும் சேர்ந்தே இருக்கும்! இப்போது இந்தியா கூட்டணி நாட்டினை ஆளப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கும் கட்டியம் கூறப்போகிறது!

திருவண்ணாமலை தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் சி.என்.அண்ணாத்துரை போட்டியிடுகிறார். இந்தப் பெயரே போதும் வெற்றிக்கு! 1987-ஆம் ஆண்டு முதல் இளைஞரணியில் கட்சிப் பணி தொடங்கி, என்னுடைய தலைமையிலான இளைஞர் அணியில் அமைப்பாளராக இருந்தவர். தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் பெயரை வைத்திருக்கும் இவரை, சென்ற தேர்தலைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில், வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல், ஆரணி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக எம்.எஸ்.தரணிவேந்தன் போட்டியிடுகிறார். திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்து – கழகப் பணியையும், உள்ளாட்சிப் பொறுப்புகளில் இருந்து – மக்கள் பணியையும் சிறப்பாகச் செய்த இவரின் குரல், ஆரணியின் குரலாக டெல்லியில் ஒலிக்க, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இரண்டு பேரையும் வெற்றி பெற வைக்கத் தயாராகிவிட்டீர்களா? நீங்கள் வாக்களிப்பது மட்டுமல்ல, இந்த ஸ்டாலினின் தூதுவனாக – உங்கள் பகுதியில் இருக்கும் மக்களிடமும் உதயசூரியனுக்கு வாக்கு கேட்க வேண்டும். கேட்பீர்களா? அதற்குப்பிறகு என்ன! வெற்றி உறுதி! வேட்பாளர்கள் உட்காருங்கள்!

நான் எல்லாக் கூட்டங்களிலும் சொல்வது போன்று, இந்த தேர்தல்களம், இரண்டாவது விடுதலை போராட்டம்! இந்த ஜனநாயகப் போர்க்களத்தில், பேரறிஞர் அண்ணா சொன்னதைத்தான் நான் எண்ணிப் பார்க்கிறேன். அண்ணா சொல்லுவார்: “இந்த உலகத்தில் எங்களுக்கு இரண்டு எஜமானர்கள். ஒன்று, எங்கள் மனச்சாட்சி! இரண்டு, இந்த நாட்டு மக்கள்!” இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், மக்களுக்காக மனச்சாட்சிப்படி நல்லாட்சி நடத்துபவன்!

தமிழ்நாட்டைப்போலவே, தில்லியிலும் ஒரு நல்லாட்சி அமைய வேண்டும் என்றுதான் உங்கள் ஆதரவைக் கேட்டு வந்திருக்கிறேன். இந்தியா என்ற அழகிய நாட்டை அழித்துவிடாமல் தடுக்க – ஜனநாயகச் சக்திகளும் – இந்திய நாட்டு மக்களும் – களம் கண்டுள்ள இந்த ஜனநாயகப் போர்க்களத்தில், இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்! இன்றைக்குத் தமிழ்நாட்டு மக்களின் எண்ணம் என்னவாக இருக்கிறது!

நம் தமிழ்நாட்டை மதிக்கும் – நம் அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றும் – நம் இனத்தை – இனத்தின் பண்பாட்டை மதிக்கும் – எல்லாவற்றிற்கும் மேலாக, நம் தாய்நாட்டைப் பாதுகாக்கும் ஒரு பிரதமர் வேண்டும். அப்படிப்பட்ட பிரதமரைத்தான், இந்தியா கூட்டணி நிச்சயம் வழங்கும். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் – ஜனநாயகத்தை – தமிழ்நாட்டை – நாட்டின் எதிர்காலத்தை – இளைஞர்களை – மகளிரை – எதிர்காலத் தலைமுறையைப் பாதுகாக்கும்!

இந்தியாவில் சமூகநீதி நீடிக்க வேண்டும்! ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்! வேற்றுமையில் ஒற்றுமை தொடர வேண்டும்! எங்கும் சமத்துவம் தழைக்க வேண்டும்! அரசியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டும்! நம் நாட்டின் பன்முகத்தன்மை தொடர வேண்டும்! அதற்கு முதலில், பா.ஜ.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்! ஏன் என்றால், ”பா.ஜ.க. ஆண்டதும் போதும் – மக்கள் மாண்டதும் போதும்” என்று இந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் தயாராகிவிட்டார்கள்.

இந்த நல்ல செய்தி, திருவண்ணாமலையில் மட்டுமல்ல – தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்ல – தென்மாநிலங்களில் மட்டுமல்ல – வடமாநிலங்களில் இருந்தும் – ஒட்டுமொத்த இந்தியாவிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறது! இந்தச் செய்தியை நன்றாக உணர்ந்திருப்பது யார் தெரியுமா? தோல்வி பயத்தில் ஒவ்வொரு நாளும், ஏதாவது பொய்யையும், புரளியையும் கிளப்பி – மக்களைக் குழப்பி வாக்கு வாங்க நினைக்குறாரே பிரதமர் மோடி, அவருக்குத்தான் முதலில் தெரியும்!

அதனால்தான், இப்போது பயத்தில், தன்னுடைய கூட்டணியாக இருக்கும் I.T. துறையை விட்டு, ஜூன் மாதம் வரைக்கும் காங்கிரஸ் மேல் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று சொல்கிறார்! அதேபோல், E.D.யை விட்டு, ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு பெயில் கொடுக்க சம்மதிக்கிறார்… E.D. – I.T. – C.B.I. – இதெல்லாம் போதாது என்று, நாட்டு மக்களைக் குழப்ப இப்போது R.T.I.யையும் கூட்டணியில் சேர்த்திருக்கிறார். இனிமேல் மோடி சொன்னால் மக்கள் நம்ப மாட்டார்கள் என்று அவருக்கே தெரிந்துவிட்டதால் – R.T.I. பெயரில் புரளிகளைக் கிளப்பி, குறளிவித்தை காண்பிக்கிறார். மோடி குழப்பத்தில் இருக்கிறார் என்பது, உத்தரப் பிரதேசத்தில் சென்று கச்சத்தீவு பற்றி பேசுவதிலேயே தெரிகிறது.

மோடி அவர்களே… இது ஏப்ரல்தான்! இன்னும் மே மாதம் இருக்கிறது… ஜூன் மாதம் இருக்கிறது… உங்கள் குழப்பங்கள் ஜூன் 4-ஆம் தேதி தெளிந்துவிடும்! பா.ஜ.க. எனும் மக்கள் விரோத ஆட்சியிடம் இருந்து, நாட்டிற்கு விடுதலை கிடைத்துவிடும்! ஜூன் 3 – நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு! ஜூன் 4 – இந்தியாவின் புதிய விடுதலையின் துவக்க நாள்! நம்மை எல்லாம் ஆளாக்கிய தலைவர் கலைஞர், தன் வாழ்நாள் எல்லாம், எந்த ஜனநாயகத்தைக் காக்கப் பாடுபட்டாரோ – எந்த மதச்சார்பின்மையை உறுதியுடன் நிலைநாட்டினாரோ – ”மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!” என்று தனது இறுதி மூச்சுவரை முழங்கினாரோ – அவற்றைப் பாதுகாக்கும் இந்தியா கூட்டணியின் வெற்றியை, கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் பரிசாக வழங்குவோம்.

சமீபத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். வேட்டி-சட்டை எல்லாம் போட்டு, தமிழ்த் தொலைக்காட்சிக்குப் பிரதமர் மோடி பேட்டி என்ற பெயரில் சூட்டிங் செய்திருந்தார்! அதிலாவது உண்மையைப் பேசினாரா?

ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்கள் என்று பத்தாண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தேன் என்று சொல்லியிருந்தார் என்றால் ’சபாஷ்’ போட்டிருக்கலாம்! கருப்புப் பணத்தை மீட்டுவிட்டேன்! அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்சம் ரூபாய் போட்டுவிட்டேன் என்ற சொல்லியிருந்தால், கை தட்டியிருக்கலாம். உழவர்களின் வருமானத்தை இரட்டிப்பு செய்துவிட்டேன். விலைவாசியைக் குறைத்துவிட்டேன். நதிகளை இணைத்துவிட்டேன். தமிழ்நாட்டு மீனவர்கள் கைதினைத் தடுத்துவிட்டேன். பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை செயல்படுத்திவிட்டேன் என்று சொல்லியிருந்தார் என்றால் வாழ்த்தி இருக்கலாம்.

ஆனால், அந்தப் பேட்டியில் இது எதுவும் இல்லையே! தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள் என்று நானும் ஒவ்வொரு மேடையிலும் கேட்கிறேனே! பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குச் செய்த சிறப்புத் திட்டம் என்ன சொல்லுங்கள் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறேன்… அதற்கு பதில் சொல்லவில்லை! அந்தப் பேட்டியை முழுவதுமாக பார்த்தவர்கள், அது நியூஸ் டைம்-ஆ? இல்லை, காமெடி டைம்-ஆ? என்று கொஞ்சம் கன்பியூஸ் ஆகிவிட்டார்கள்! ஏன் என்றால், அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கும் – தனக்கும் எந்த சம்பந்தமில்லை என்று ஒரு உருட்டு உருட்டினார் பாருங்கள்… பேட்டி எடுத்தவர்களே, ஆடிப் போய்விட்டார்கள்!

மாண்புமிகு பிரதமர் அவர்களே… ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனைக் கைது செய்தார்களே… உங்களுக்குத் தெரியாதுதானே? டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்தார்களே… அதுவும் தெரியாதுதானே? காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி, உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை பல்டி அடித்ததே… அதுவும் உங்களுக்குத் தெரியாதுதானே? பாவம் உங்களுக்கு, நாட்டில் I.T. – E.D. – C.B.I. இதெல்லாம், என்ன செய்கிறதென்று தெரியாது! நாங்கள் நம்பிவிட்டோம். இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது என்று சொன்னால் – நாளைக்கு உங்களுக்கும் – குஜராத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னால் நாட்டு மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறீர்கள்! அப்படியெல்லாம் நாட்டு மக்களைத் தப்புக் கணக்கு போடாதீர்கள் என்று மிகுந்த பணிவோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!

அடுத்தடுத்து இரண்டு இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்தோம். எட்டு மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டது. பாதிப்புகளைச் சீர் செய்யவும் – பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவும் – 37 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்டோம். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து பிரதமர் ஆறுதல் சொல்லவில்லை! கேட்ட நிதியையும் தரவில்லை!

ஆனால் என்ன சொன்னார் தெரியுமா? “நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அனுப்பி வைத்திருக்கிறேன். அவர் வந்து பார்த்துவிட்டு நிதியை ஒதுக்குவார்” என்று என்னிடம் பிரதமர் மோடி சொன்னார். சொன்னபடி, நிர்மலா சீதாராமன் மட்டும்தான் வந்தார், நிதி வரவில்லை! நிதி ஒதுக்காமல் என்ன சொன்னார்? “சும்மா நீங்கள் கேட்கும்போதெல்லாம் தர முடியாது” என்று நக்கலாக பதில் சொன்னார்.

அவரின் பேச்சுகளைப் பார்த்தபோது, ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. அம்மையார் நிர்மலா சீதாராமனை எதற்காக நிதி அமைச்சராக வைத்திருக்கிறார்கள் என்றால், இது போன்று நக்கலாக பதில் சொல்வதற்காகவே வைத்திருக்கிறார்கள். மக்களுக்கு உதவி செய்வதைப் பிச்சை என்று கொச்சைப்படுத்தினார் அந்த அம்மையார்!

ஆணவச் சிந்தனை கொண்ட அவர்கள் நேற்று ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், “ஐந்தாயிரம் கோடியைக் கொடுத்துவிட்டோம்; அதற்குக் கணக்கு கொடுங்கள்” என்று ஏதோ கந்துவட்டிக்காரர் போன்று பேசியிருக்கிறார்கள்.

அது முதலில் ஒன்றிய அரசு கொடுத்த நிதி என்று அவரால் சொல்ல முடியுமா? சொல்ல முடியாது! ஏன் என்றால், அது வெளிநாட்டு வங்கிகள், தமிழ்நாட்டுக்குக் கொடுத்த கடன். அந்தக் கடனையும் தமிழ்நாடு அரசுதான் திரும்பக் கட்டப்போகிறது. மக்களுக்குப் புரிய வேண்டும் என்று கொஞ்சம் விளக்கி சொல்கிறேன்…

பொதுவாக A.D.B. – K.F.W. மாதிரியான வெளிநாட்டு நிதி அமைப்புகளில் தமிழ்நாடு அரசு கடன் வாங்கினால் – அந்தப் பணம் முதலில் ஒன்றிய அரசின் கணக்கிற்கு வந்துதான் மாநில அரசுக்கு டிரான்ஸ்பர் ஆகும்! அப்படி, மாநில அரசு வாங்கிய கடன் எப்படி ஒன்றிய அரசின் நிதியாகும்? அப்படி வந்த பணத்தை ஒன்றிய அரசு கொடுத்ததாகச் சொல்வது எப்படி நியாயம்? பொய் சொன்னாலும் – பொருந்தச் சொல்லுங்கள் அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்களே… ஊரை ஏமாற்றத் திருக்குறள் சொல்லாமல் – உளமார ஒரு திருக்குறளைப் படியுங்கள்…

“தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்!”

ஒன்றிய அரசு நிதி ஒரு ரூபாய்கூட கொடுக்காமல், கணக்கு கேட்கிறீர்களே கணக்கு… மாநில அரசு நிதியில் இருந்து என் மக்களுக்காக நான் செய்ததற்குக் கணக்கு சொல்கிறேன். குறித்துக் கொள்ளுங்கள்…

மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் 3 சுற்றுப்புற மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பிற்கு 10 அரசாணைகள் வெளியிட்டு, 2 ஆயிரத்து 476 கோடி ரூபாய்க்கு மேல் மாநில அரசே நிவாரண உதவிகளைச் செய்திருக்கிறது. மிக்ஜாம் புயலுக்கு ஒன்றிய அரசு நிதி எதுவும் கொடுக்கவில்லை… டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பிற்கும் ஒன்றிய அரசு நிதி கொடுக்கவில்லை… இராமநாதபுரம் மாவட்ட வறட்சிக்கும் ஒன்றிய அரசு நிதி கொடுக்கவில்லை! இது எல்லாவற்றிற்குமேல் மாநில அரசு நிதியைத்தான் கொடுத்தோம்! எதற்குமே நிதி கொடுக்காமல் பிரதமர் மோடி மாதிரியே நிர்மலா சீதாராமனும் வாயால் வடை சுடுகிறார்.

மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களே… ஓட்டுக் கணக்கு போட்டு, பொய்களை அள்ளி வீசினால் மக்கள் ஏமாந்துவிடுவார்கள் என்று மனக் கணக்கு போடாதீர்கள்.. நாள் கணக்கில்தான் உங்கள் ஆட்சி இருக்கிறது… ஆணவத்தில் தப்புக் கணக்கு போடாதீர்கள்!

நான் மறுபடியும் தெளிவாகச் சொல்கிறேன்… நாங்கள் கேட்கும் நிதி, N.D.R.F. என்ற தேசிய பேரிடர் நிதியில் இருந்து, 37 ஆயிரம் கோடி ரூபாயைத் தாருங்கள் என்று கேட்கிறோம். அதில் செலவு செய்யாமல் 58 ஆயிரம் கோடி ரூபாயை வைத்திருக்கிறீர்களே… அந்த நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.

அவர்கள் கொடுத்ததாகச் சொல்வது, பேரிடர் ஏற்பட்டாலும் ஏற்படவில்லை என்றாலும் நமக்குக் கண்டிப்பாகத் தர வேண்டிய S.D.R.F. என்ற மாநிலப் பேரிடர் நிதி! கரகாட்டக்காரன் படத்தில் வருமே… வாழைப்பழ காமெடி, அது போன்று… “அதுதான் இது – இதுதான் அது” என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பார்த்தால், அவர்களுக்கு நக்கலாகத்தான் இருக்கிறது! நாங்கள் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்திருக்கிறோம் என்று ஒவ்வொரு உதவிகள் வழங்கும் போதும், செய்திக்குறிப்பாகத் தந்து, அதெல்லாம் செய்திகளில் வந்திருக்கிறது. அதையெல்லாம் அம்மையார் கொஞ்சம் படிக்க வேண்டும்… அதை விட்டுவிட்டுத் தமிழ்நாட்டு மக்களைப் பார்த்து, ஏகடியம் – நக்கல் – நையாண்டி – கிண்டல் – கேலி என்று ஆணவமாகப் பேச வேண்டாம். ஒன்று மட்டும் தெளிவாகிவிட்டது… பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு கொடுக்க உங்களிடம் பணம் இருக்கிறது; ஆனால் மனம்தான் இல்லை!

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரைக்கும் – சர்வாதிகாரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நடக்கும் தேர்தல்! மதவாதத்திற்கும் – மதச்சார்பின்மைக்கும் நடக்கும் தேர்தல்! பா.ஜ.க. இழைக்கும் சமூக அநீதிக்கும் – சமூக நீதிக்கும் நடக்கும் தேர்தல்! பா.ஜ.க. தலைமையிலான சந்தர்ப்பவாதக் கட்சிகளுக்கும் – ’இந்தியா’ என்ற கொள்கைக் கூட்டணிக்கும் நடக்கும் தேர்தல்! வெறுப்பாட்சியை அகற்றி, நல்லாட்சியை அமைக்கவுள்ள தேர்தல்! அதை மனதில் வைத்துதான், சாதனைகளாக மாறப்போகும் வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறோம். அதில் சிலவற்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்…

பத்தாண்டுகளாக சாமானிய மக்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று சிறிதும் நினைத்துப் பார்க்காமல், மக்கள் விரோத பா.ஜ.க. அரசால் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்!

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும்!

தொழிலாளர் விரோதச் சட்டங்கள், மறுசீரமைப்பு செய்யப்படும்!

ஜி.எஸ்.டி. சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்படும்!

விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளிலும் – வங்கிகளிலும் வாங்கியிருக்கும் கடனும் – வட்டியும் தள்ளுபடி செய்யப்படும்!

உழவர்களின் வேளாண் விளைபொருட்களுக்கு மொத்த உற்பத்தி செலவுடன் ஐம்பது விழுக்காடு என்பதை வலியுறுத்திக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்!

தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து, 150 நாட்களாகவும், ஊதியம் 400 ரூபாயாகவும் உயர்த்தப்படும்!

மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்!

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்!

சாதிவாரிக் கணக்கெடுப்பும், வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள மக்கள் குறித்த கணக்கெடுப்பும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே நேரத்தில் ஒன்றிய அரசால் எடுக்கப்படும்!

ஆரணி பகுதியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைக்கப்படும்!

நீண்ட காலமாக நிறைவேற்ற முடியாமல் இருக்கும் திண்டிவனம் முதல் நகரி வரையிலான இரயில் பாதைத் திட்டம் விரைந்து முடிக்கப்படும்!

நெல், அரிசி வியாபாரிகளுக்கு ஊக்கம் தரும் வகையில் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும்!

பத்தாண்டுகளாக நிறுத்தி வைத்திருக்கும் திருவண்ணாமலை – திருக்கோவிலூர் – மாம்பழப்பட்டு – விழுப்புரம் வழியாக சென்னை வரை சென்று கொண்டிருந்த தினசரி இரயில் பொதுமக்களுக்காக மீண்டும் இயக்கப்படும்!

இப்படி வாக்குறுதிகளைக் கொடுக்கிறோம் என்றால், தி.மு.க. என்றாலே, “சொன்னதைச் செய்வோம்! செய்வதைத்தான் சொல்வோம்!”

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தேன். அதில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி, ஒவ்வொரு மேடையிலும் அதைப் பட்டியலிட்டு வருகிறேன். சாதனைகளை முழுமையாக எடுத்துச் சொன்னால், அனைத்துக் கூட்டங்களும், “சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களாக” ஆகிவிடும். அதனால், நம்முடைய திராவிட மாடல் அரசின் சாதனைகளால் பயனடைந்தவர்கள் பற்றிச் சொல்கிறேன்.

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் இருக்கும் நடுபடுகை என்ற ஒரு இடம்! இரண்டு ஆற்றுக்கு நடுவில் இருக்கும் அந்தப் படுகையில் 35 குடும்பங்கள்தான் வசிக்கிறார்கள். ஆற்றைக் கடந்து சென்று பட்டீஸ்வரம் அரசுப் பள்ளியில் படித்த மாணவி ஒருவர், கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து, புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுகிறார். அந்த ஆயிரம் ரூபாய், படிப்பதற்குப் பயன்படுவது மட்டுமல்ல, படிக்கும்போதே சம்பாதிப்பது போன்று, தனக்குத் தன்னம்பிக்கை பிறப்பதாகவும் சொல்லியிருக்கிறார். விவசாயக் கூலித் தொழிலாளர்களின் மகளான அவருக்கு மனதில் உருவாகும் தன்னம்பிக்கைதான், நாம் சொல்லும் விடியல்! இப்படிப்பட்ட திட்டங்களாக பார்த்துப் பார்த்து உதவிக் கொண்டு இருக்கிறோம்!

பெருந்தலைவர் காமராசர் மதிய உணவுத் திட்டத்தை, தொடங்குவதற்குக் காரணம், மதிய சாப்பாடு கொடுத்தாலாவது, பள்ளிகளுக்குப் பிள்ளைகள் படிக்க வருவார்கள் என்று நிறைவேற்றினார்! நானும் ஒரு பள்ளி நிகழ்ச்சிக்கு செல்லும்போது, எதார்த்தமாக, “காலை உணவு சாப்பிட்டீர்களா?” என்று ஒரு மாணவியிடம் கேட்டபோது, அப்பா-அம்மா வேலைக்குச் செல்வதால் – உணவு செய்யவில்லை என்று சொன்ன உடன், அதிகாரிகளை அழைத்து, எவ்வளவு நிதி நெருக்கடி இருந்தாலும் பரவாயில்லை. நம்முடைய குழந்தைகள் நன்றாகச் சாப்பிட்டு, நன்றாகப் படிக்கக் காலை உணவுத் திட்டம் கொண்டு வர வேண்டும். ஃபைல் தயார் செய்யுங்கள் என்று சொல்லிக் கையெழுத்து போட்ட கைதான் இந்த ஸ்டாலினுடைய கை. இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் தினமும் 16 லட்சம் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் சாப்பிடுகிறார்கள்! இப்போது இந்தத் திட்டம் கனடா நாட்டிலும் தொடங்கப்பட்டிருக்கிறது. இங்கு இருக்கும் பல்வேறு மாநிலங்களிலும் ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள்.

அதுமட்டுமல்ல, நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தினமும் இலட்சக்கணக்கான மகளிர் மகிழ்ச்சியாக, ”நாங்கள் ஸ்டாலின் அய்யா பஸ்-இல், இலவசமாக பயணம் செய்கிறோம்” என்று சொல்லும் விடியல் பயணம் திட்டம்!

வெளியூரில் வேலைக்குச் செல்லும் மகளிர் பாதுகாப்பாகத் தங்குவதற்கு, ’தோழி விடுதி’!

மாணவர்களுக்கும் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்போகும் ”தமிழ்ப் புதல்வன்” திட்டம்!

இளைஞர்களுக்கு, திறன் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெற்றுத் தரும், ”நான் முதல்வன்” திட்டம்!

கோடிக்கணக்கான தாய்மார்கள் முகத்தில் புன்னகையையும், கோடிக்கணக்கான தமிழ்நாட்டுக் குடும்பங்களில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

எங்கள் அண்ணன் ஸ்டாலின் கொடுக்கும், தாய்வீட்டுச் சீர் இருக்கிறது என்று தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 15 இலட்சம் சகோதரிகள் உரிமையோடும், பாசத்தோடும் சொல்லும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்!

இப்படி, பள்ளிக் குழந்தைகள் முதல் கல்லூரிக்குச் செல்லும் மாணவ – மாணவிகள் வரை, பயன்பெறும் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம். இந்தத் திட்டங்களால் ஒவ்வொரு மகளிரும் – ஒவ்வொரு மாணவியும் – ஒவ்வொரு மாணவனும் – ஏன், தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் பயனடைகிறார்கள் என்று நெஞ்சை நிமிர்த்தி பெருமையுடன் உங்கள் முன் நிற்கிறேன்! அதனால்தான், நம்முடைய திராவிட மாடல் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றும் நல்லாட்சியை வழங்கி வருகிறோம்!

ஆன்மீகத்தின் முக்கியமான அடையாளமாக இருக்கும் நகரங்களில் ஒன்று, இந்தத் திருவண்ணாமலை! “எல்லார்க்கும் எல்லாம்” என்று அனைத்து மக்களுக்குமான அரசாக, நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது!

ஆன்மீகக் கோயில்கள் முறையாகச் செயல்படுவதற்காக ‘இந்து சமய அறநிலையத் துறையை‘ நூறு ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கியதே, நீதிக்கட்சி ஆட்சிதான். அனைத்துத் துறையும் வளர்வதுதான் திராவிட மாடல் வளர்ச்சி என்று முழங்கி, திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்!

‘திராவிடம்’ என்ற சொல் யாருக்கெல்லாம் பயத்தைக் கொடுக்கிறதோ – யாருக்கெல்லாம் பிடிக்காதோ – அவர்கள், எங்களை மதத்தின் விரோதிகளாகச் சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். மக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் மதவாதத்திற்குத்தான் நாங்கள் எதிரிகளே தவிர, மதத்திற்கு எதிரிகள் அல்ல! கலைஞர் பாணியில் சொன்னால் “கோயில் கூடாது என்பதல்ல; கோயில் கொடியவர்களின் கூடாராமாகிவிடக் கூடாது!” என்பதே எங்கள் எண்ணம்! மொத்தத்தில், மதங்களை வைத்து மக்களைப் பிளவுபடுத்த நினைப்பவர்களுக்குத்தான் நாங்கள் எதிரிகள்!

நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, அதிகமாகக் கலந்து கொள்ளும் அரசு விழாக்கள் எது தெரியுமா? இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெறும் விழாக்கள்தான். அந்த அளவுக்கு ஏராளமான பணிகளை மிகச் சிறப்பாகச் செய்து கொண்டு இருக்கிறோம்.

என்ன பணிகள் செய்யப்படிருக்கிறது என்று ஒரு சிறிய பட்டியல் போட வேண்டும் என்றால், 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை மீட்டிருக்கிறோம். 1500 கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்திருக்கிறோம். கிராமப்புறக் கோயில்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் ஆண்டுக்கு 1250 கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்ய நிதி ஒதுக்கி இருக்கிறோம். கோயில் திருப்பணிகளுக்கு வழிகாட்ட ‘வல்லுநர் குழுவை’ அமைத்திருக்கிறோம். பழமை மாறாமல் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. ஆயிரமாண்டு பழமையான 112 கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கோயில் குளங்களைச் சீரமைத்திருக்கிறோம். இறைவனுடைய கோயிலில் சமத்துவம் நிலவ வேண்டும் என்று ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்’ என்ற சட்டத்தை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம். ஆலயங்களில் அன்னைத் தமிழ் ஒலிக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். அதனால்தான் பக்தர்கள் போற்றும் அரசாகவும் – அற்பர்கள் கதறும் அரசாகவும் – நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது! ஆன்மீகப் பெரியவர்கள் – மடாதிபதிகள் போற்றிப் பாராட்டும் அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது. மக்களைப் பண்படுத்தத்தான் ஆன்மீகத்தைப் பயன்படுத்த வேண்டுமே தவிர – பா.ஜ.க. போன்று மக்களைப் பிளவுபடுத்தப் பயன்படுத்தக் கூடாது. ஃபோட்டோஷாப்பில் கட்டமைக்கப்பட்ட ’குஜராத் மாடல்’ அம்பலப்பட்டு இன்றைக்கு திராவிட மாடல் என்பது இந்தியாவின் குரலாக மாறியிருக்கிறது! இந்த நிலையில்தான், கள்ளக்கூட்டணிகள் தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்ய வந்திருக்கிறது!

நடப்பது இந்தியாவை யார் ஆள வேண்டும் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல்! இந்தியா கூட்டணிதான் ஆள வேண்டும் என்று நாம் சொல்கிறோம்! ஆனால், அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, யார் ஆள வேண்டும் என்று சொல்லாமல் – யார் ஆளக் கூடாது என்று சொல்லாமல் – யார்தான் உண்மையான எதிரி என்றே தெரியாமல் – எதற்காகத் தேர்தலில் நிற்கிறோம் என்ற தெளிவே இல்லாமல் – கள்ளக்கூட்டணிக்கு ஆதாயம் தேடித்தரக் களத்திற்கு வந்திருக்கிறார் பழனிசாமி!

ஒரு பக்கம் கூட்டணி முறிந்துவிட்டது என்று சொல்வார்; மற்றொரு பக்கம் பா.ஜ.க.வை எதிர்க்க முடியாது – அது கூட்டணி தர்மம் என்று சொல்வார்! ஆளுங்கட்சியாக இருந்தால் கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டு, ”எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக எதிர்க்கிறார்கள்” என்று சொல்வார். எதிர்க்கட்சியாக மக்களால் ஓரங்கட்டப்பட்ட பிறகு, “எதிர்க்கட்சி ஏன் எதிர்க்க வேண்டும்?” என்று அரசியல் தத்துவமேதைகளே மயங்கி விழுவது போன்று புதுப் புது தத்துவங்களாகப் புலம்புவார். இப்படிப்பட்ட பழனிசாமி தமிழ்நாட்டிற்கு மட்டும் துரோகம் செய்தவர் இல்லை… தன்னைச் சுற்றியிருந்த அத்தனை பேரையும் முதுகில் குத்தியவர்!

அவரின் ஃபிளாஷ்பேக் என்ன? கொஞ்சம் ரீவைண்ட் பண்ணிப் பார்ப்போமா? அம்மையார் ஜெயலலிதா மறைந்த பிறகு, பழனிசாமி முதலில் சசிகலா அணியில் இருந்தார்! அம்மையார் சசிகலா முதலமைச்சர் ஆக வேண்டும் என்று முயற்சி செய்தபோது, பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்று ஒரு காமெடி செய்தார். இந்த நிலைமையில் அம்மையார் சசிகலா சிறைக்குப்போக, அந்த அம்மையார் கால் நோக்கி ஊர்ந்து, தவழ்ந்து கூவத்தூர் கவனிப்புகளால் முதலமைச்சரானார் பழனிசாமி!

உடனே, டி.டி.வி.தினகரனுக்கு வாக்கு கேட்டுச் சென்றார். ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து ஆனது! “கட் பண்ணா” பன்னீர்செல்வம்கூட கூட்டணி சேர்ந்து, அதே தினகரனுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். அடுத்து, பொதுக்குழுவில் பன்னீர்செல்வத்திற்கு வாட்டர் பாட்டில் மரியாதை செய்தார். இப்படி ஒரு மெகா சீரியல் எடுக்கும் கதைபோன்று குழப்பங்கள் நிறைந்த துரோகக் கதைதான், பழனிசாமியின் கதை!

இப்போது, பிரிந்து போனவர்கள் பா.ஜ.க.வுடன் நேரடி கூட்டணியாகவும், பழனிசாமி – கள்ளக்கூட்டணியாகவும் வந்திருக்கிறார்கள்! இப்போது, இதில் யாருக்கு யார் நண்பன்? யாருக்கு யார் எதிரி? யாருக்கு யார் துரோகி?

இதற்கு பதில் என்ன தெரியுமா? இவர்கள் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டிற்கும் – தமிழ்நாட்டு மக்களுக்கும் – ஏன், ஒட்டுமொத்த இந்திய மக்களுக்குமே எதிரி மட்டுமல்ல, விரோதமான கூட்டணி!

தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க. – அதற்குத் துணைபோகும் பா.ம.க. – தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க. என்ற இந்த துரோகக் கூட்டணியை ஒருசேர வீழ்த்துங்கள்.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு துணைநிற்கப் போகும் இந்தியா கூட்டணியின் ஒன்றிய அரசை ஆட்சியில் அமர்த்துங்கள்! அதற்குத் திருவண்ணாமலை தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கும் – ஆரணி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தனுக்கும் – உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் உங்களையெல்லாம் நான் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழர்கள், பா.ஜ.க. போன்று, அடக்கப் பார்ப்பவர்களையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்! அ.தி.மு.க. போன்று, அடிமையாக இருப்பவர்களையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்! என்று கடந்த இரண்டு தேர்தலில் நிரூபித்தது போன்றே, இந்தத் தேர்தலிலும் காட்ட வேண்டும்!

மீண்டும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன்… நீங்கள் அளிக்கும் வாக்குதான் இந்தியாவைக் காப்பாற்றும்! தமிழ்நாட்டைக் காப்பாற்றும்! எதிர்காலத் தலைமுறையைக் காப்பாற்றும்! பாசிசத்தை வீழ்த்த – இந்தியாவைக் காக்க – உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்… நாற்பதும் நமதே! நாடும் நமதே! நாற்பதும் நமதே! நாடும் நமதே!”

இவ்வாறு பேசினார்.