வேலூர்: வேலூர் பகுதியில் அடகுக் கடை சுவரில் ஓட்டை போட்டு  ரூ.70 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள  அடகுக் கடையின்  பக்கவாட்டு சுவரில் துளையிட்டு  கொள்ளையர்கள் அங்கு அடகு பிடிக்கப்பட்டிருந்த வெள்ளி மற்றும் தங்க நகைகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். காட்டுபாடி அருகே சேர்காடு,  கூட்டுச் சாவடியில் இந்துமதி என்பவரின் அடகு கடையில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. இன்றுகாலை கடையை திறக்க வந்த கடை உரிமையாளர், கடைக்குள் பொருட்கள் சிதறி கிடந்ததுடன், அங்குள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன்,  இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து,  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், கொள்ளை நடைபெற்ற கடை மற்றும் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தினர்.

 அடகுக் கடையிலிருந்து 30 கிலோ தங்க, வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்றும், இதன் மதிப்பு ரூ.70 லட்சம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.