அலற வைக்கிறது சென்னை…
நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
43 வயது பெண்ணை வீடு புகுந்து பலாத்காரம் செய்திருக்கிறான் 20 வயது இளைஞன்..
திருவல்லிக்கேணி MRTS ரயில் நிலையத்திலிருந்து மூன்று நாட்களாக பின் தொடர்ந்ததில் அந்தப் பெண் ஒரு அப்பார்ட்மெண்டில் தனியாக வசிப்பது அவனுக்கு தெரிய வந்துள்ளது. கடந்த சனிக்கிழமை பெண்ணை பின்தொடர்ந்து அப்பார்ட்மெண்டில் நுழைந்திருக்கிறான். பிறகு பெண்ணின் வீட்டு கதவைத் தட்டி தண்ணீர் கேட்பது போலவும் வாடகைக்கு வீடு விசாரிப்பது போலவும் நடித்திருக்கிறான்.
சிறிது நேரத்தில் கதவை உள்பக்கமாக தாளிட்டுக் கொண்டு கத்தி முனையில் மிரட்டி அந்த பெண்ணை பலாத்காரம் செய்திருக்கிறான். அப்படியே பெண்ணை நிர்வாணமாகவும் புகைப்படங்கள் எடுத்திருக்கிறான். பெண்ணின் செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டு தப்பி ஓடிய அவன் பின்னர் இரவு தொடர்புகொண்டு, போலீஸிடம் போகக்கூடாது என்றும் நிர்வாண படங்களை இணையத்தில் ஏற்றப்போவதாகவும் மிரட்டி இருக்கிறான்.
முதலில் பயந்து போன பெண், பின்னர் இது பெரிய அளவில் பிளாக்மெயிலில் கொண்டு போய்விடும் என உடனே போலீசில் தகவல் சொல்ல, அவர்கள் பெண்ணுக்கு வந்த செல்போனை டிரேஸ் அவுட் செய்து சம்பந்தப்பட்டவனை கைது செய்திருக்கிறார்கள். விசாரணையில் திருவல்லிக்கேணியை சேர்ந்த அவன் பெயர் விஷால் என்பது தெரியவந்துள்ளது. விஷால் இப்போது நீதிமன்ற காவலில்.
ஏதோ பாலியல் பலாத்கார குற்ற சம்பவம் என தோன்றினாலும், எந்த பெண்ணை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என 20 வயது இளைஞனுக்கு துணிச்சல் வருகிறதே, அதுதான் இங்கு ஆராயப்பட வேண்டிய விஷயம். எந்த சட்டமும் தங்களை ஒன்றும் புடுங்க முடியாது என்ற திமிர்த்தனம் தற்போது இளைஞர்கள் மத்தியில் தாண்டவமாடுகிறது. அத்தகைய மோசமான போக்கின் வெளிப்பாடுதான் இதுபோன்ற பாலியல் பலாத்காரங்கள்.
தனியாக இருக்கும் பெண் நம்மை என்ன செய்துவிட முடியும் என்ற அலட்சியம்? தனக்கு நேர்ந்த கொடுமையை பெண் வெளியே சொல்லி அசிங்கப்பட்டு கொள்ள மாட்டார் என்ற அசாத்திய நம்பிக்கை. மூன்றாவது, நிர்வாணப்படம் என்றால் பெண் ஒடுங்கிப்போய் அழுதுகொண்டே எல்லாத்துக்கும் தொடர்ந்து ஒத்துழைப்பார் என்ற எகத்தாளம்.
இதுபோன்ற காரணங்களால் தான் அந்த பெண்ணை செல்போனில் மிரட்டி இருக்கிறான். போன் நம்பரை வைத்து போலீசார் தன்னை பிடிப்பார்கள் என்ற பயமே அவனுக்கு கொஞ்சம்கூட இல்லை பாருங்கள்.
Picture – only representation purpose