தொகுதி பங்கீடு அதிருப்தி காரணமாக, திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேற வாய்ப்புள்ளது என்று நேற்று செய்திகள் வெளியான நிலையில், இன்று 6 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு, கூட்டணி உறுதியாகியுள்ளது.

அநேகமாக, இந்த தொகுதிகள் அனைத்திலும் விசிக, உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடும் என்று தெரிகிறது. ஏனெனில், தனிச்சின்னம் விஷயத்தில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன.

திமுக கூட்டணியில், தொகுதிப் பங்கீட்டில் பெரிய களேபரம் என்று செய்திகள் வெளியான நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனான உடன்பாடு ஒருவழியாக முடிந்துள்ளது.

இதனையடுத்து, மதிமுக உடனான பேச்சிலும் விரைவில் தீர்வு எட்டப்படும் என்று தெரிகிறது. மேலும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் முரண்டுபிடிக்க வாய்ப்பில்லை என்பதே தகவல். அதேசமயம், வேல்முருகன் உள்ளிட்ட வேறு சிலருடனும் பிணக்குகள் எழ வாய்ப்பில்லை.

எனவே, விடுதலை சிறுத்தைகள் என்ற ஒற்றைக் கட்சியுடன் எட்டப்பட்ட உடன்பாடு, வேறு பல கட்சிகளையும் எளிதாக வழிக்குக் கொண்டுவரக்கூடிய விஷயமாக மாறியுள்ளது. இதனை உணர்ந்து கொண்டுதான் திமுக தலைமையும், விடுதலை சிறுத்தைகளுடன் முதலில் ஒப்பந்தத்தை முடிவு செய்திருக்கலாம்!