சென்னை: தலைநகர் சென்னையில் ரவுடிகளை ஒழிக்க தனிப்படை அமைக்கப்பட இருப்பதாக மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்து உள்ளார்.

காவல்துறையில் பணிபுரியும், குறிப்பாக சென்னையில் பணியாற்றும் பெண் காவலர்கள் முதல் பெண் ஆய்வாளர்கள் உள்பட  காவல்துறையைச் சேர்ந்த 4,800 பெ பேருக்கு, கால சமநிலை வாழ்க்கை முறை குறித்த 2 நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு இன்று சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை துணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த பயிற்சியை தொடங்கி வைத்த  சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது, இந்த பயிற்சியானது,  பணிச் சுமைக்கிடையில் ஏற்படும் மன அழுத்தத்தை இலகுவாக்கும் வழிமுறைகளை  கற்றுக்கொடுகும் என்று கூறியதுடன்,  இந்த வகுப்பு குறித்த கருத்துக்களை நீங்கள் தெரிவிக்கலாம், அதை தானே நேரடியாக பார்வையிட்டு அடுத்தபடியாக இந்த வகுப்புகளில் எடுக்கவேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பேன் என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்கர் ஜிவால், சென்னையில், ரவுடிகள் அட்டகாசத்தை ஒழிக்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதன்பேரில் சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் உதவி ஆணையர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்படவுள்ளது. சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற ஸ்டிங் ஆப்பரேஷனின்போது, 717 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில்  70 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்கள் பதுக்கி வைத்திருந்த 13 கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

சென்னையில், முக்கிய வழக்குகளில் தொடர்புடைய  6 ஆயிரம் ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு விசாரணை மற்றும் சோதனைகள்  நடத்தப்பட்டு வருவதாக கூறியவர்,  குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் வண்ணாரப்பேட்டை பகுதியில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 30 ரவுடிகள் கண்டறியப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது சென்னையில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளது என்றும் கூறினார்.

தமிழ்நாடு முழுவதும் 560 ரவுடிகள் கைது! அதிரடி வேட்டை நடத்திய டிஜிபி சைலேந்திரபாபு