சென்னை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 32 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறையால் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தமக்கு ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தன.

இதைத் தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த  மனு நிலுவையில் இருந்து வருகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொளி மூலம் சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதி செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வருகிற 17 aஅம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதனால் 32 ஆவது முறையாக அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் மீது மீண்டும் தனது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்துள்ள வழக்கில் 17 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.