சென்னை

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தேதி குறிப்பிடாமல் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை  ஒத்தி வைத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைதாகி 8 மாதங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்  சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு இரண்டாவது முறையாக மனுத் தாக்கல் செய்தார்  வழக்கில் அமலாக்கத்துறையின் வாதம் முடிவடைந்த நிலையில்  செந்தில் பாலாஜி தரப்பு வாதத்துக்காக 19-ம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்தி வைத்தார்.

செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் தமக்கு 19-ம் தேதி தன்னால் ஆஜராக இயலாது என்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று ஜாமீன் மனு மீதான விசாரணையை 21-ம் தேதிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளி வைத்தார்.  செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று மதியம் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது செந்தில் பாலாஜி தரப்பில், 250 நாட்களாகச் சிறையில் உள்ள தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும். நேரடியாகச் செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை. முறைகேடுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. அமலாக்கத்துறை ஆவணங்களை திருத்தியுள்ளது. நிபந்தனை விதித்தால் அதற்குக் கட்டுப்படத் தயார் என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அமலாக்கத்துறை தரப்பில், “பென்டிரைவில் இருந்த ஆவணங்களில் 284 கோப்புகளை முதலில் தடயவியல் துறை ஆய்வுக்கு எடுத்தது. இதையடுத்து மொத்தமாக 487 கோப்புகளை தடயவியல் துறை ஆய்வுக்கு எடுத்தது. அமலாக்கத்துறை எந்த தலையீடும் செய்யவில்லை. சுமார் 2,900 பேருக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் சேகரித்ததற்கான ஆதாரங்கள் உள்ளன” என வாதங்கள் எடுத்துவைக்கப்பட்டன.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததால் தேதி குறிப்பிடாமல் வழக்கு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார்.