சென்னை:  உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தாமஸ் பாண்டியன் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது (88)

88 வயதாகும் தா.பாண்டியன்  உடலநலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கட்சிப்பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார்.  சிறுநீரகப் பிரச்னை காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். டயாலிசிஸ் செய்தும் வருகிறார். அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக   சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர். சிறுநீரக பாதிப்பு அதிகரித்ததால் அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக நேற்று மாலை மருத்துவர்கள் அறிவித்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தா.பாண்டியன் காலமானார். இதை கம்யூனிஸ்டு கட்சி தலைவரான முன்னாள் எம்எல்ஏ  சி.மகேந்திரன் உறுதிப்படுத்தி உள்ளார்.