சென்னை: புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி – ஜனநாயகத்தை வெட்கப்பட வைக்கும் செயல் என மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான  கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்எல்ஏக்களே தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால், மாநில காங்கிரஸ் அரசு  பெரும்பான்மையை இழந்தது. இதனால், , நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராத நிலையில் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்திருந்தார்.

அதை மத்திய அமைச்சரவை ஏற்று, குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தது.  அதையடுத்து புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் வழங்கினார். . இதனால், புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில்,

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்து புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்திருக்கிறார்கள். ஜனநாயகத்தையே வெட்கப்ப டவைக்கும் இச்செயலுக்கு, குடியரசு என்ற பெயர் என்ன பொருத்தம்? என கூறியுள்ளார்.