சென்னை: வரும் (பிப்ரவரி)  21ந்தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள  செல்வப்பெருந்தகை பொறுப்பேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத் ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பு வகித்த திரு. கே.எஸ். அழகிரி அவர்களிடமிருந்து புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் 21.2.2024 புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தலைவர் பொறுப்பினை ஏற்றுக் கொள்வார்.

இந்த  நிகழ்வில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம், எம்.பி., டாக்டர் ஏ. செல்லக்குமார், எம்.பி., திரு. பி. மாணிக்கம் தாகூர், எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு. கே.வீ. தங்கபாலு, திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன், எம்.எல்.ஏ., திரு. சு. திருநாவுக்கரசர், எம்.பி., திரு. குமரி அனந்தன், திரு. எம். கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்பார்கள்.

அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், நிர்வாகப் பெருமக்கள், இயக்க நண்பர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.