திருப்பூர்; பாஜக அண்ணாமலை உடன் செல்பி போட்டி என்ற அறிவிப்பு தொடர்பாக திருப்பூர்  சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியை தொடர்ந்து, எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியும் சர்ச்சையில் சிக்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் பகுதியில்,  ’செல்பி வித் அண்ணா’ என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் ’செல்பி’ எடுக்கும் போட்டி நடத்தப்படு வதாக திருப்பூர் பாஜக வடக்கு மாவட்ட மகளிரணி சார்பில் வாட்ஸ்அப் உள்பட சமூக வலைதளங்களில்  விளம்பரங்கள் செய்யப்பட்டன. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கல்லூரி மற்றும் எல்.ஆர்.ஜி. பெண்கள் கல்லூரிகளில்  இப்போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், பாஜகவுக்கு ஆதரவு திரட்டும் வகையில்,  கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடத்தப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. பாஜகவில் இணைந்து தேசத்துன் கரங்களை வலுப்படுத்துவோம் எனவும் அந்த விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் செல்பி எடுக்கும் மாணவர்களுக்கு அண்ணாமலையின் கையெழுத்திட்ட உறுப்பினர் அட்டை உடனே வழங்கப்படும் எனவும் விளம்பரப்படுத்தப்பட்டது.

இந்த விளம்பர போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி,  சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சியினர் கல்லூரியில் கட்சி உறுப்பினர் முகாம் நடத்த எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் அனுமதியின்றி கல்லூரியின் பெயரை தவறாக பயன்படுத்துவதாகவும், கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சி நடத்த எந்த அனுமதியும் தரவில்லை எனவும் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுபோல எல்.ஆர்.ஜி. பெண்கள் கல்லூரி சார்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் வ.கிருஷ்ணன், பாஜகவின் வாட்ஸ் அப் விளம்பர செய்தியுடன் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் சமூக ஊடகங்கள் (வாட்ஸ் அப்) வாயிலாக சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் பெயரை கல்லூரி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் தவறாக பயன்படுத்தி வருவதாக அறிகிறோம் எனவும், இந்த நிகழ்விற்கும் கல்லூரிக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. மேலும் கல்லூரி வளாகத்தில் எவ்வித அனுமதியும் கல்லூரி நிர்வாகம் தரவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்து உள்ளார்.