சென்னை: உயர்கல்வித் துறை சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் விரிவுரையாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 1024  நபர்களுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

உயர்கல்வித்துறை சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் விரிவுரையாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப் பட்ட 1024 நபர்களுக்கு பணிநியமன ஆணையினை  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28.9.2022) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் விரிவுரையாளர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1024 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 11 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில், விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு உரிய நபர்களை தெரிவு செய்திட ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 27.11.2019 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டு. 8.12.2021 முதல் 13.12.2021 வரை கணினி வழித் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதன்படி, விரிவுரையாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 1024 நபர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர். தா. கார்த்திகேயன், இ.ஆ.ப., தொழில்நுட்ப கல்வி ஆணையர் திருமதி க. லட்சுமிபிரியா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.