சென்னை

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தங்களை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றால் தங்கள் கட்சியை கலைத்து விடுவதாக கூறி உள்ளார்.

 

நா த க ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சி.பா. ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம்.

”முல்லை பெரியார் அணை உறுதி தன்மையோடு இருப்பதாக ஆய்வு செய்தவர்கள் கூறியிருக்கிறார்கள். அணை பலவீனமாக இருக்கிறதா? பலவீனமாக இருக்கிறது என்றால் அணைக்குள் அணையை கட்டிக்கொள்ளலாம். இடித்து விட்டு ஏன் கட்டவேண்டும்.

திருவள்ளுவருக்கு காவி உடை போடுவார்கள், கருப்பு உடை போடுவார்கள். நாங்க இரண்டையும் கிழித்து போடுவோம். அதற்கு வெகு நாட்கள் இல்லை. அதிகாரத்தில் இருப்பதால் இதுபோன்ற சேட்டைகளை செய்து வருகிறார்கள். எங்கள் வள்ளுவனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது.

ராமர், ராமர் என சொன்னார் எடுபடவில்லை, இப்போது தன்னையே ராமர் என கூறிக் கொள்கிறார். அவர் கோவில் கட்டவில்லை வீடு கட்டிக்கொண்டார். பரமாத்மா ஆட்சி பத்தாண்டுகளாக எப்படி இருந்தது என பார்த்துக் கொள்ளுங்கள். எப்படி பட்டவரை பரமாத்மா அனுப்பி வைத்திருக்கிறார் பாருங்கள், காலக்கொடுமை.

நீங்கள் சரியாக ஆண்மகனாக இருந்தால், ஏப்ரல் 19-ந்தேதிக்கு முன்பாக இதெல்லாம் பேசி இருக்க வேண்டும். என் மண், என் மக்கள் என அண்ணாமலை நடந்தார். இப்போது அமித்ஷா பேச்சுக்கு என்ன பதில் சொல்ல போகிறார். தமிழராக உங்களது நிலைப்பாடு என்ன?.

தனித்து நின்று போட்டியிட்டு காட்டுங்கள். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு பாஜக தனிப்பட்ட முறையில் பெற்ற வாக்குகள் எங்களை விட அதிகம் இருந்தால், கட்சியை கலைத்து விட்டு செல்கிறேன். கூட்டணியை கூட்டிக்கொண்டு இருக்கக் கூடாது. அப்போது யார் மூன்றாவது பெரிய கட்சி என தெரியும்”,

என்று கூறியுள்ளார்.