சென்னை:

மிழக அரசு வழங்கும் மானிய விலையிலான ஸ்கூட்டர் குறித்து சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி  மானிய விலை ஸ்கூட்டருக்கு இன்று முதல் (20ந்தேதி) ஜூலை 4ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து உள்ளது.

தமிழக முதல்வராக ஜெயலலிதா  இருந்தபோது வேலைக்கு போகும் பெண்களின் வசதிக்காக மானிய விலை ஸ்கூட்டர் திட்டம் அறிவித்திருந்தார்.அதன்படி, தமிழக அரசு சார்பில் இருசக்கர வாகனம் பெற ரூ. 25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50% இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டம் ஜெ.மறைவுக்கு பிறகு கடந்த 2018ம்  பிப்ரவரி24ந்தேதி  ஜெ. பிறந்தநாள் அன்று, பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் வேலைக்கு போகும் பெண்கள் தமிழக அரசின் மானிய விலை இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்  என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பணிக்குச் செல்லும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின்கீழ், மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வாங்க விரும்புபவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 4ந்தேதி என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேலைக்குப் போகும் பெண்களே அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்….

விண்ணப்பங்கள் பெறுவது எப்படி?

மானிய ஸ்கூட்டர் பெற விரும்புபவர்கள், அதற்கான  விண்ணப்பங்களை, அருகில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ அளிக்கலாம். மேலும், விவரங்களுக்கு, மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்கள் மற்றும் ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எளிதாக இயக்கக்கூடிய (Gearless/Auto geared) கியர்லஸ்/ஆட்டோகியர் இருசக்கர வாகனங்களை இத்திட்டதின் கீழ் வாங்கலாம். மேலும், மாற்றுத்திறனாளி மகளிர் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களும் வாங்கலாம்.மகளிருக்கு வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25,000 இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.

மேலும், மாற்றுத்திறனாளி மகளிருக்கு கூடுதல் வசதி பொருத்தப்பட்ட வாகனத்திற்கு மானியத்தொகையாக வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.31,250/- இவற்றில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படும். பயன்பெறும் மகளிர் தங்களுக்கு விருப்பப்பட்ட வாகனங்களை வாங்கிக் கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள் Retro – fitted வகையிலான வண்டி வாங்கினால் மட்டுமே கூடுதல் மானியத் தொகை வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து சொந்த முதலீடு அல்லது வங்கிக்கடன் பெற்று இருசக்கர வாகனம் வாங்க வேண்டும். 125-சிசிக்கு மிகாமல் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் (1988) பதிவு செய்யக் கூடிய வாகனத்தை வாங்க வேண்டும். 2018ம் ஆண்டு மாடல் மாசு ஏற்படுத்தாத அல்லது பின்னர் உற்பத்தி செய்யப்பட்ட வாகனமாக இருக்க வேண்டும்.

மகளிர் பயனாளி, தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவராகவும், தமிழகத்தில் வசிப்பவராகவும், விண்ணப்பிக்கும் தருணத்தில் 18 முதல் 40 வயது வரை உள்ளவராகவும், ஒட்டுநர் உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். அவர்களின் தனி ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- மிகாமல் இருக்க வேண்டும். அதற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.