சென்னை: பள்ளிகள் தற்போது திறக்கப்படுவதற்கான வாய்ப்பே இல்லை, அக்டோபர் 1 முதல் பள்ளிகளை திறக்கலாம் என அவ்வப்போது மாற்றி மாற்றி தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி வந்தததற்கு முரணாக, தமிழகஅரசு  அக்டோபர் 1ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்து உள்ளது.

இந்த நிலையில்,  தமிழக பள்ளிக்கல்வித்துறை அதன் அமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லையா?” திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ தமிழ்நாட்டில் இப்போது பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்த இரண்டே நாட்களில் ‘திடீரென்று’ அது சாத்தியமாகிவிட்டது எனக் கருதும் வகையில், அக்டோபர் 1 ம் தேதி 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் செல்லலாம் எனத் தலைமைச் செயலாளர் இன்று அறிவித்து இருக்கின்றார்.

‘விருப்பத்தின் பேரில்’ என்ற வார்த்தைகளின் பின்னால், கொரோனா தொற்று குறையாத நிலையில், ‘நமக்கேன் வம்பு’ என்று ‘நைசாக’ ஒதுங்கிக் கொள்ளும் உத்தி ஒளிந்திருப்பதை எவராலும் எளிதாகவே புரிந்துகொள்ள முடியும்.

அப்படி இரண்டே நாட்களில் சாத்தியமாக்கும் இந்த ‘ ஜீபூம்பா’ வித்தைகள் தெரிந்தவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தால், ஒரே நாளில் கொரோனாவை இந்த நாட்டை விட்டே விரட்டி இருக்கலாமே!

அமைச்சர் செய்த அறிவிப்பின் ஈரம் காயும் முன்பே இப்படி ஒரு அறிவிப்பு தலைமைச் செயலாளரால் வெளியிடப்படுகின்றதென்றால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்குத் தன் துறையில் என்ன நடக்கின்றது என்றே தெரியாத வண்ணம் செய்திகள் மறைக்கப்படுகின்றனவா?

அல்லது பள்ளிக்கல்வித்துறை அதன் அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லையா?

மூத்த அமைச்சரின் பொறுப்பில் இருக்கும் ஒரு துறையில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் அவரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றனவா?

அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர் வெளியூரில் இருக்கும் போது அவருக்குத் தெரியாமலேயே தலைமைச் செயலகத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுப் பத்திரிகை செய்தியாக வெளிவருகின்றனவா?

நான் கேட்கவில்லை; நாட்டு மக்கள் கேட்பது என் காதில் விழுகிறது!”

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.