டெல்லி: கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ள அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல் முறையீடு மனுக்களை அவசரமாக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில், பள்ளி, கல்லூரிகளில், மதஅடையாளங்களை முன்னிலைப்படுத்தும் ஆடைகள் அணிய தடை விரிதக்கப்பட்டது. அதன்படி, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளில் கலந்து கொள்ள தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து வன்முறைகளும் தாண்டவமாடியது. அதை ஒடுக்கிய மாநில அரசு, தனது அறிவிப்வை வாபஸ் பெற மறுத்தது.

இது தொடர்பாக பல்வேறு  வழக்குகள் தொடரப்பட்டன.  வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் ஹிஜாப் தடை சரியே என உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த   2 நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன் மீது விரைவில் விசாரணை தொடங்க உள்ளது.

இந்த நிலையில் கர்நாடகத்தை சோ்ந்த முஸ்லிம் மாணவிகள் சிலர், உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தனர். அதில்,  மார்ச் மாதம் பள்ளி-கல்லூரிகளில் ஆண்டு தேர்வுகள் தொடங்குவதால், வழக்கை விரைவாக விசாரித்து, தாங்கள்  ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்கும்படி கோரியது. மாணவிகள் சார்பில் ஆஜரான வக்கீல், சாதன் பராசத், “வருகிற மார்ச் 9-ந் தேதி கர்நாடகத்தில் பள்ளி தேர்வுகள் தொடங்குகின்றன. முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்காவிட்டால், அவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும். பெரும்பாலான மாணவிகள் தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கிறார்கள். தேர்வுகள் அரசு பள்ளிகளில் நடைபெறும். அங்கு ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி இல்லை. அதனால் இந்த மனு மீது அவசரமாக விசாரணை நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்த முறையீட்டை நிராகரித்த நீதிபதி, ஹோலி பண்டிகையை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை விடப்ப்படுவதால், அதன் பிறகு இந்த மனுவை விசாரிக்க அமர்வு உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.