சென்னை: ஜெ.மரணம் தொடர்பாக சசிகலாமீது பழி சுமத்தவில்லை அவர்மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் இருந்து சசிகலா ஒதுக்கியிருந்தாலும், அவரது தாக்கம் சட்டமன்ற தேர்தலில் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. சமீபத்தில், ஓபிஎஸ், சசிகலா தொடர்பாக, ஆதரவான கருத்துக்களை தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில்  போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ, “ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது நாங்கள் வீண் பழி சுமத்தவில்லை என்று கூறியுள்ளார்.

கோவில்பட்டி தொகுதியில் அமமுக சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அங்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இயற்கையான முறையிலேயே மரணம் அடைந்தார். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் இறக்கும் நிலை உண்டானது. இதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

மேலும், அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் சசிகலா பற்றி கூறிய கருத்து சரியானதுதான். இயற்கையை யாரும் வெல்ல முடியாது ஆனாலும் சசிகலா மீது பழி சுமத்தப்பட்டது. ஜெயலலிதா இறந்த பிறகு பல விமர்சனங்கள் உண்டானது. வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்போதைய முதல்வராக இருந்த ஓ பன்னீர்செல்வம் விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும் எனக் கூறினார். அதில் யாருக்கும் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை எங்னறவர், அதிமுகவில் சசிகலா இணைவது குறித்து முதல்வரும், துணை முதல்வரும் தான் முடிவெடுக்க வேண்டும்” என்று கூறினார்.