நெல்லை:
நெல்லை மாநகர காவல்துறை ஆணையரிடம்  சசிகலா புஷ்பா எம்.பி. மீது 20 லட்ச ரூபாய் ஏமாற்றியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்.   இவர் இன்று நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் சிவஞானத்திடம் புகார் ஒன்றை அளித்தார்.

சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா

அதில், நெடுஞ்சாலை ஒரத்தில் வைக்கப்பட்டிருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் காண்டிராக்ட் வாங்கித்தருவதாகச் சொல்லி, கடந்த வருடம் (2015) மே மாதம்,  20 லட்ச ரூபாயை சசிகலா புஷ்பா தன்னிடமிருந்து வாங்கியதாகவும், ஆனால் சொல்லியபடி காண்டிராக்ட் பணியை வாங்கித்தராமல் ஏமாற்றிவிட்டார் என்றும் தெரிவித்திருக்கிறார்.   சசிகலா புஷ்பா மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் ராஜேஷ் குறிப்பிட்டிருக்கிறார்.
 
ராஜேஷ்
ராஜேஷ்

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகும்,  தனது எம்.பி. பதவியில் தொடர்வதாக சசிகலா புஷ்பா தெரிவித்திருக்கிறார். மேலும் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தன்னை அறைந்ததாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் ராஜ்யசபாவிலேயே குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் சசிகலா புஷ்பாமீது மோசடி புகார் கொடுக்கப்பட்டிருப்பதால், இதில் அ.தி.மு.க.வுக்கு தொடர்பு இருக்குமோ என்ற ஐயம் எழுந்துள்ளது.
 
புகார் மனு
புகார் மனு

இந்த நிலையில் நாம், தற்போது சசிகலா புஷ்பா மீது புகார் கொடுத்திருக்கும்  ராஜேஷின் வழக்கறிஞர் டி.ஜெனியை தொடர்புகொண்டு, “கடந்த வருடம் மே மாதம் பணம் கொடுத்ததாக சொல்கிறீர்கள். ஆனால் இதுவரை அமைதியாக இருந்துவிட்டு, சசிகலா புஷ்பா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு புகார் கொடுக்கிறீர்கள். ஒருவேளை, புகார் கொடுக்கும்படி அ.தி.மு.க. மேலிடத்தில் இருந்து  நிர்ப்பந்தம் ஏதும் வந்ததா” என்று கேட்டோம்.
அதற்கு வழக்குரைஞர் ஜெனி, “எங்களுக்கு எந்தவித நெருக்கடியும் யாரும் தரவில்லை. தற்போது புகார் கொடுத்திருக்கும் ராஜேஷ், சசிகலா புஷ்பாவின் உறவினர்தான். அந்த நம்பிக்கையில்தான் பணம் கொடுத்தார். ஆனால் சசிகலா புஷ்பா ஏமாற்றிவிட்டார். அவரிடம் பணத்தைத் திருப்பித்தருமாறு பலமுறை கேட்டோம். ஆனால் அவர் உரிய பதில் அளிக்கவில்லை.  ஆகவேதான் புகார் கொடு புகார் அளித்திருக்கிறோம்” என்றார்.