சென்னை: 
விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் என்று தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.
நான்கு வருடம் சிறைவாசம் அனுபவித்த சசிகலா கடந்த ஜனவரி மாதம் வெளியில் வந்தார்.  அவர் வெளிவந்த நாளிலிருந்தே பல அதிரடி நடவடிக்கைகள் ஏற்படுமென்று அனைவரும் எதிர்பார்த்தனர்.  உடனடியாக எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்காமல் அமைதியாக இருந்தார் சசிகலா.  அவ்வப்போது அமமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்ஜிஆர் இதழில் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதி வந்தார் சசிகலா.
அந்த வகையில் இன்று எல்லோரும் நம் பிள்ளைகள் தான் என்ற தலைப்பில் சசிகலா தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில்,  கட்சி வீணாவதை ஒரு நிமிடம் கூட கட்சியை வளர்த்த நம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். எல்லாரும் அஇஅதிமுக பிள்ளைகள்தான்.  புரட்சித்தலைவர் எப்போதுமே கட்சி வித்தியாசமே பார்க்க மாட்டார்.  இவர்களா? அவர்களா? என்றெல்லாம் பார்க்க மாட்டார்.  அதையெல்லாம் பார்த்துத் தான் வளர்ந்து வருகிறோம். என்னைப் பொருத்தவரை எல்லாரும் ஒன்று தான்,  எல்லாருமே நம் பிள்ளைகள் தான். அஇஅதிமுக என்பது தொண்டர்களின் இயக்கம்.  அதனை எப்போதும் தொண்டர்கள் நிரூபித்துக் காட்டுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.