கார்த்திக் நரேன் இயக்கத்தில் சரத் குமார், ரஹ்மான், அதர்வா நடிக்கும் ‘நிறங்கள் மூன்று’ படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளது.
துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் கார்த்திக் நரேன். இந்தப் படத்தை அவர் இயக்கியபோது அவருக்கு வயது 22. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருவார் என்று கார்த்திக் நரேன் கணிக்கப்பட்டார்.
துருவங்கள் பதினாறு படத்திற்கு பின்னர் திரைக்கு வந்த அருண் விஜய்யின் மாஃபியா, ஓடிடியில் வெளியான தனுஷின் மாறன் படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இடையே கவுதம் மேனன் தயாரிப்பில் உருவான நரகாசூரன் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, நெட்ஃபிளிக்ஸ் ஆந்தாலஜி படமான நவரசாவில் ப்ராஜெக்ட் அக்னி என்ற பாகத்தை இயக்கினார். இது ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சரத்குமார், ரஹ்மான், அதர்வா இணையும் நிறங்கள் மூன்று படத்தை இயக்கி முடித்துள்ளார் கார்த்திக் நரேன். படத்தில் போலீஸ் கேரக்டரில் சரத்து குமார் நடித்துள்ளார். சஸ்பென்ஸ், ட்விஸ்ட், க்ரைம், ஆக்சன் படமாக நிறங்கள் மூன்று இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் கார்த்திக் நரேனுக்கு கம் பேக்காக அமையும் என்று அவரது ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
நிறங்கள மூன்று படத்திற்கு ஜேக்ஸ் பிஜா இசையமைத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம்தான் இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த நிலையில் 4 மாதங்களில் நிறைவு பெற்றுள்ளது.
இந்தாண்டு இறுதிக்குள் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.